அர்ஜுன் ரக பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு.. திருச்சி நிறுவனங்களுக்கு நல்ல சான்ஸ்!
திருச்சி: இந்திய ராணுவத்தின் அர்ஜூன் பீரங்கி வண்டிக்கான உதிரி பாகங்கள் தயாரிக்க திருச்சி சிறு, குறு, நடுத்தர தொழில்சாலைகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்திய ராணுவத்துறையில் தனியார் நிறுவனங்கள் 25 சதவீத பங்களிப்பு அளிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
இந்நிலையில் தான் திருச்சியை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் இந்திய ராணுவத்துக்கு பங்களிப்பு செய்ய திட்டமிட்டுள்ளன. அதாவது இந்திய உற்பத்தியில் தயாரிக்கப்படும் அர்ஜூன் பீரங்கி வண்டிக்கான உதிரி பாகங்கள் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை, ஒசூர், திருச்சி, சேலத்தை முந்திய கோவை.. மத்திய அரசின் பாதுகாப்பு துறை உற்பத்தியில் அசத்தல்
குழு ஆய்வு
இதற்காக சமீபத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ் சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு எஸ்டேட்டுக்கு(சிவிஆர்டிஇ, CVRDE) திருச்சி சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களின் குழு சென்று ஆய்வு செய்தது. பீரங்கி வண்டிக்கான உதிரி பாகங்களை தயாரிப்பது சாத்தியமானதா என அவர்கள் ஆராய்ந்தனர். மேலும் திருச்சி பிஎச்இஎல் நிறுவன தொழில்நுட்ப உதவியையும் அக்குழுவினர் கேட்டுள்ளனர்.
தயாரிக்க முடியும்
இதுகுறித்து பெல்சியா அமைப்பின் தலைவர் ராஜப்பா ராஜ்குமார் கூறுகையில், ‛‛அர்ஜுன் பீரங்கி வண்டிக்கான உதிரி பாகங்களை உரிய நிபுணத்துவத்துடன் திருச்சியில் தயாரிக்க முடியும். இதை மேற்கொண்டால் திருச்சியில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு கூடுதல் வருமானம், தொழில்நுட்ப பயன்பாடு கிடைக்கும்'' என்றார்.
ஆதரவு
இதுபற்றி டிஆர்டிஓ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‛‛மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான உதிரி பாகங்கள் தயாரிக்க தயாராக இருக்கும் சிறு, குறு, நடுத்த தொழிற்சாலைகளுக்கு ராணுவ அமைச்சகம் ஆதரவளிக்கும். மேலும் இதற்காக திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி உள்ளிட்ட தேவையான ஆதரவு வழங்கப்படும்" என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த ஆய்வின்போது ராணுவத்துறையில் 2000க்கும் அதிகமான உதிரி பாகங்களை திருச்சியில் இருந்து தயாரிக்க முடியும். இதற்கு திருச்சி பிஎச்இஎல் உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கூறினர். மேலும் இதுதொடர்பாக விரைவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு எஸ்டேட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடன் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
திருச்சியை பொறுத்தமட்டில் கொதிகலன் உதிரிபாகங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல், குறைந்த போன ஆர்டர் ஆகியவற்றால் தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தான் இந்திய ராணுவத்துறைக்கான உதிரி பாகங்களை தயாரிக்க முடியும் என்பதை தொழில்நுறையினர் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் திருச்சியில் கடனால் மூடும் நிலையில் உள்ள 450க்கும் அதிக ஆலைகள் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க வாய்ப்புள்ளது.