கமல் சர்வாதிகாரி... மநீம தோல்விக்கான காரணங்களை அடுக்கும் முருகானந்தம் - கட்சியில் இருந்து விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.
திருச்சி: கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தான் மக்கள் நீதி மய்யம் சட்டசபைத் தோல்வியை சந்தித்தது என்று கட்சியில் இருந்து விலகியுள்ள பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றம் சாட்டியுள்ளார். 100 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதே தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோற்க காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கியமான நிர்வாகிகள் எல்லோரும் வெளியேறி வருகின்றனர். மகேந்திரன் தொடங்கி சந்தோஷ்பாபு, பத்மபிரியா என பலரும் வெளியேறி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இலையுதிர்காலம் ஆரம்பமாகி விட்டது.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும் கூட சில தொகுதிகளில் கவனிக்கத்தக்க வகையில் வாக்குகளை பெற்றது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவிகிதம் நன்றாகவே இருந்தது.
மநீம கூட்டணி
சட்டசபைத் தேர்தலில் மநீம கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்த நிலையில் , ஒரு இடங்களில் கூட மக்கள் நீதி மய்யம் கூட்டணி வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார்.
காலியாகும் கமல் கூடாரம்
மக்கள் நீதி மய்யம் தோல்விக்கு பிறகு அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலக ஆரம்பித்தனர். கமலுக்கு அடுத்து முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட பலர் வரிசையாக கட்சியை விட்டு வெளியேறினர். துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா உள்ளிட்ட பல கட்சியிலிருந்து விலகினர்.
திருச்சி முருகானந்தம்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முருகானந்தத்துடன் சேர்த்து திருச்சி மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் 2200 பேர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஜனநாயகம் இல்லை
செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம் கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது. கட்சிக்குள் ஜனநாயகம் காணமல் போய் சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது.
கூட்டணிக்கு ஒதுக்கியது ஏன்
கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார்.
சட்டசபைத் தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது தான் தோல்வி அடைய காரணம். எதற்காக நூறு இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை.
கமல்தான் காரணம்
கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் எழுப்பினேன. இது வரை எந்த பதிலும் கூறவில்லை.
சட்டசபைத் தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு காரணம் தலைமை தான். கமல் தன்னுடைய புகழுக்காக செயல்பட்டாரோ என்கிற சந்தேகம் அதிகமாக இருக்கிறது.
தோல்வியை ஏற்றுக்கொள்ளாத கமல்
மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல, சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை.
தோல்வியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பி விட்டார். ஆனால் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் கமல்ஹாசன் தான்.
இன்னும் பலர் விலகுவார்கள்
கமல் நேர்மையாக இருக்கிறாரா என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். என்னுடன் சேர்ந்து கட்சியில் இருந்து இரண்டாயிரம் பேர் விலகுகின்றனர். இன்னும் சில நிர்வாகிகளும் விலகி விட்டனர். வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள் என தெரிவித்தார்.
மவுனம் கலைவாரா கமல்
மகேந்திரன் கட்சியில் இருந்து விலகிய உடன் அறிக்கை வெளியிட்டார் கமல். கட்சியில் களையெடுப்பு நடக்கும் என்று தெரிவித்தார். அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகினாலும் அதைப்பற்றி கமல் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மனதில் உள்ளதை மின்னஞ்சல் அனுப்புங்கள் உங்களை நேரில் சந்திக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் கமல்ஹாசன் கனத்த மவுனத்தில் இருக்கிறார். மவுனம் கலைவாரா கமல் என்று தொண்டர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.