திருச்சியில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு.. விஜய் விசிட்டுக்கு முன்பு செக் வைத்த போலீஸ்
திருச்சி: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் சென்றபோது அனுமதியின்றி கூட்டம் சேர்த்துதல், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் சுற்றுப்பயணத்திற்காக காவல்துறையிடம் ஆனந்த் நேரடியாக சென்று அனுமதி கேட்டிருந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தவெகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி ஆகியோருடன் தவெக, நாம் தமிழர் கட்சிகளும் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். நாம் தமிழர் தனித்து போட்டி என்று கூறிவிட்டனர். விஜய் கூட்டணி ஆட்சி என்று கூறிவருகிறார்.

விஜய் அரசியல்
விஜய் தவெக மற்றும் திமுக இடையே தான் தேர்தலில் போட்டி என்று கூறியுள்ளார். மறுபக்கம் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் திமுக - அதிமுக இடையே தான் போட்டி என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் களமிறங்குவதால் விஜய் இந்த தேர்தலில் குறிப்பிட்டத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். கடந்த மாதம் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தியிருந்தார். இந்நிலையில் வருகிற 13 ஆம் தேதி முதல் விஜய் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
காவல்துறை அனுமதி
திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்கான அனுமதி பெறும் பணியில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். காவல்துறை அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதாக தவெகவினர் புகார் தெரிவித்திருந்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரடியாக சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி கேட்டு வருகிறார்.
இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய் கூட்டத்திற்கு அனுமதி கேட்பதற்காக புஸ்ஸி ஆனந்த் கடந்த 6 ஆம் தேதி திருச்சி சென்றிருந்தார். திருச்சி விமான நிலையம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கடிதம் வைத்து சாமி கும்பிட்டார். அப்போது அங்கு ஏராளமான தவெகவினர் கூடியிருக்கிறார்கள்.
ஆனந்த் மீது வழக்கு
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக கார்களை நிறுத்தி சென்றுள்ளனர். காவல்துறையினர் அந்த கார்களை எடுக்க சொல்லி அறிவுறுத்தியும், தவெகவினர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். சில நிர்வாகிகள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சட்டவிரோதமாக ஒன்று கூடி, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது.
அந்தப் புகாரில் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட செயலாளர் கரிகாலன், துளசி மணி, செந்தமிழ், மோசஸ் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி விமான நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் சில நாட்களில் விஜய் அங்கு பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில் ஆனந்த் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்திருப்பது தவெகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications