டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை நாளை மறுநாள் சந்திக்கும் எல்.முருகன், அண்ணாமலை!
திருச்சி: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை நாளை மறுநாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நாளை மறுநாள் சந்திக்க உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதனைத் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: மத்திய அரசு எங்கேயும் குலக் கல்வித் திட்டத்தை ஊக்கப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விஸ்வகர்மா சமூகத்தினர் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக அளவில் முத்ரா கடனுதவி பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளோம். மக்களின் மனது புண்படும்படி மத்திய அரசு எப்போதும் நடந்து கொள்ளாது. அப்பகுதியின் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமித்த கருத்துடன் என்னிடம் டங்ஸ்டன் சுரங்கம் பற்றி பேசினார்கள். அழகர் கோவில் அருகே உள்ளது; பாரம்பரியமிக்க தலங்கள் அங்கே உள்ளன. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் தொலைபேசியிலும் பேசி நிலைமையை விளக்கி இருக்கிறோம்.
இது தொடர்பாக டெல்லியில் வரும் 12-ந் தேதி அதிகாலை வந்து சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி. நானும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை வரும் 12-ந் தேதி சந்திக்க உள்ளோம். அன்று நல்ல முடிவோடு தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவோம். விவசாயிகள் குரலுக்கு நிச்சயம் மத்திய அரசு செவிசாய்க்கும்.
ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சட்டசபையில் பெரிய நாடகத்தையே நடத்தி இருக்கிறார். இத்தனைக்கும் நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம் எனவும் தெரியவும்; மத்திய அமைச்சரிடம் பேசிவிட்டோம்; நிச்சயம் சுரங்க ஒப்பந்தம் ரத்தாகும் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும்; ஆனாலும் மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் நினைத்தால் டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதற்காக அவர் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டு பெண்களின் தாலி அறுக்கக் கூடிய, தீங்கு விளைவிக்கக் கூடியது டாஸ்மாக்தான். ஆகையால் முதல்வர் ஸ்டாலின் ஏன் பதவி விலகாமல் இருக்கிறார்? இதற்கு முதல்வர் பதவி விலகினால்தான் அவர் பேச்சுக்கு மரியாதையும் இருக்கும்.
திமுகவின் ஊழல்கள் தொடர்பாக திமுக பைல்ஸ் என்ற பெயரில் 2 ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். தேர்தல் நேரத்தில் திமுக பைல்ஸ் 3 வெளியிடப்படும்.
பாஜகவுடன் விடுதலைச் சிறுத்தைகளை ஒப்பிடக் கூடாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு பாஜக கீழானதும் அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications