ஆளுநர் திரும்ப திரும்ப தப்பா பேசுறாரு.. ‘ஆழ்ந்த ஞானம் கிடையாது’ - ஆர்.என்.ரவி மீது வைகோ காட்டம்!
திருச்சி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது, திருக்குறள் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் பரப்பி வருகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார்.
திருக்குறள் பற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய வைகோ, இந்துத்வா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும் திணித்து விட வேண்டும் என்று சங் பரிவார் இயக்கங்கள் முயற்சி செய்கின்றன. அதற்கு உறுதுணையாக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருக்குறளை பற்றி தவறாக பேசுகிறார் என விமர்சித்துள்ளார்.
நீங்கள் திருக்குறளை எவ்வளவு அலசி ஆராய்ந்தாலும் அது கிடைக்காது! ஆளுநர் ரவிக்கு பாடம் எடுத்த காங்கிரஸ்
திருக்குறள் பற்றி ஆளுநர் ரவி
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறள் உலகிற்கான முதல் நூல் என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மனிதன் எப்படி இருக்க வேண்டும் என கூறும் நூல் திருக்குறள். ஆனால் அது ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. ஆனால் திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை நூலாக மட்டும் காட்ட நினைப்பது தவறு. நம் நாட்டின் ஆன்மீக சிந்தனைகளை கொண்ட நூல் திருக்குறள். ஆனால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் உண்மையான அர்த்தத்தை விளக்கவில்லை.
அரசியலுக்காக
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனை தவறாக மொழிபெயர்த்துள்ளார். மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். திருக்குறளின் உண்மையை கூறும் வகையில் அதை மொழிபெயர்க்க வேண்டும்." எனப் பேசினார். ஆளுநரின் இந்தப் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆளுநர் பேச்சு பற்றி வைகோ
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருக்குறள் குறித்து ஆளுநர் ரவி பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, "ஆளுநர் திரும்பத் திரும்ப தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவ கருத்துக்களை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று சங் பரிவார் இயக்கங்களுக்கு துணையாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.
ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது
திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் ஸ்விட்சரை விடவா வேறு எவரும் ஆராய்ச்சி செய்ய முடியும்? அவர் சொல்லி இருக்கிறார், உலகிலே இதற்கு நிகரான நூல் ஒன்றும் இல்லை என்று. பௌத்த மதத்தில் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் இல்லை, அப்படிப்பட்ட உயர்ந்த கருத்துக்களை திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்று நோபல் பரிசு பெற்ற அவரே கூறியிருக்கிறார். அதைப்போல ஜி.யு.போப்பும் சரியான முறையில் மொழி பெயர்த்து இருக்கிறார். தவறாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு கூட்டம் வேலை செய்வதற்கு, ஆளுநர் துணை போவது துரதிஷ்டவசமானது." எனத் தெரிவித்துள்ளார்.
மனம் போன போக்கில்
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, "இன்னும் 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அவர், திராவிட மாடல் அரசு அரசு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு, இன்னும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார்" எனத் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என பாஜக தலைவர்கள் பேசுவது குறித்து பதிலளித்த வைகோ, "அவர்கள் விருப்பத்திற்கு.. தங்களுடைய மனம் போன போக்கிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது" எனத் தெரிவித்தார்.