வைகுண்ட ஏகாதசி.. திருச்சி மாவட்டத்துக்கு டிச.23ல் உள்ளூர் விடுமுறை! பள்ளி, கல்லூரிக்கு பொருந்துமா?
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனினும், பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறுவதால் இந்த விடுமுறை பொருந்தாது என கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
மகாவிஷ்ணுவின் 108 வைணவ தளங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இந்த கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பானது.

இந்த வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வரும் 12ம் தேதி தொடங்கி 2024 ஜனவரி மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள். இதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியின் பரமபத வாசல் திறப்பையொட்டி டிசம்பா் 23ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பா் 12ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி, கல்லூரிகளில் தோ்வு நடைபெறும்பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications