வருண்குமார் ஐபிஎஸ் வழக்கு! திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்! வழக்கு 29-க்கு ஒத்திவைப்பு
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்றைய தினம் சீமான் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் வருண்குமார் வழக்கில் சீமான் நேற்றைய தினம் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர், சீமான் நாளை (இன்று ஏப்.8) ஆஜராவார் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகிறார். இந்த வழக்கு என்ன என்பதை பார்க்கலாம். நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து வருண்குமார் திட்டமிட்டு பழிவாங்குவதாக சீமான் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வருண்குமாரையும் அவருடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவையும் எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து ஆபாசமாக விமர்சித்து சீமானின் ஆதரவாளர்கள் அவதூறு பரப்பியதாக வருண்குமார் புகார் அளித்திருந்தார்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் திருச்சி 4ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் நஷ்ட ஈடு கோரியிருந்த வழக்கின் விசாரணைக்கு வருண்குமார் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சீமானுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர் அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தனர். அதன்படி சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, இந்த வழக்கை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications