பொங்கி வரும் காவிரி! ஆர்ப்பரிக்கும் ஆற்றின் நீரோசை! திருச்சிக்கு ஓடோடி வந்த சந்தீப் சக்சேனா!
திருச்சி: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பொங்கி வரும் நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா.
மேலும் இந்த ஆய்வின் போது, நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் கே.என்.நேருவும் இந்த ஆய்வின் போது அங்கிருந்த உரிய ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

காவிரியில் வெள்ளம்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், அங்கிருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பில் ஆய்வு
குறிப்பாக காவிரி ஆற்றில் முக்கொம்புக்கு நேற்று மாலை நிலவரப்படி 1½ லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆறுகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்றும் முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

24 மணி நேரம்
மேலும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து 24 மணி நேரமும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடுகள் பற்றி நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் துரைமுருகனின் அறிவுறுத்தல் படி அவர் திருச்சி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video

கண்காணிப்பு தீவிரம்
ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த சந்தீப் சக்சேனா, மேட்டூரில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாகவும் அது முக்கொம்பு மேலணையை வந்தடைய 8 முதல் 9 மணி நேரம் ஆகும் எனவும் கூறினார். தொடர்ந்து 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications