திருச்சி கிழக்கு தாசில்தார் ஆபிஸில் சுற்றி வளைக்கப்பட்ட முருகேசன்.. அடுத்த நொடியே நடந்த அசிங்கம்
திருச்சி: பட்டா பெயர் மாற்றம் செய்ய , நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் வாங்கி அரசு ஊழியர்கள் பலர் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள். அந்த வரிசையில் திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நில அளவையர் முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
லஞ்சம் தராமல் பட்டா பெயர் மாற்றம் சாத்தியமா என்று பல்வேறு அரசு அலுவலகங்களிலும் மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனெனில் இன்று வரை லஞ்சம் வாங்கி கைதாகும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஒரு சில மாதத்தில் மட்டும் ஏராளமான அதிகாரிகள் சிக்கி உள்ளனர். திருச்சியிலும் அப்படித்தான் ஒரு அதிகாரி சிக்கியுள்ளார்.

இந்நிலையில் திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த 59 வயதாகும் வணுதா முனியப்பன், அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் திருச்சி கொட்டப்பட்டு வருவாய் கிராமத்தில் 1,200 சதுரஅடி வீட்டு மனையை வாங்கி இருக்கிறார். அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்துள்ளார். இந்த நிலையில் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து முனியப்பனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து ஏன் விண்ணப்பம் தாமதமாகி வருகிறது என தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது, அவரிடம் மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான நில அளவையர் முருகேசன் (34) என்பவரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
இதையடுத்து முனியப்பன் நேரில் சென்று முருகேசனிடம் பேசியிருக்கிறார். அதற்கு முருகேசன் மனையினை வந்து ஆய்வு செய்துவிட்டு உட்பிரிவு செய்து தர ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைக்குமாறு முருகேசனிடம் கேட்டுள்ளார். அதன்பேரில் முருகேசன் ரூ.5 ஆயிரம் குறைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கேட்டிருக்கிறார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் போலீசார் முனியப்பனுக்கு ரசாயணம் தடவிய 10000 நோட்டுக்களை கொடுத்தனுப்பினர்.
இதனையடுத்து முனியப்பன் திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று நில அளவையர் முருகேசனிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நில அளவையர் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications