காவிரி பிரச்சனை எப்போது தீரும்? திருச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தந்த நம்பிக்கை
திருச்சி: காவிரி பிரச்சினை குறித்து இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும். காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த பின் முன்னாள் பிரதமரும், கர்நாடகாவை சேர்ந்த ஜனதாதளம் எஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கூட கர்நாடகா முறைப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது இல்லை. மழை குறைவு, அணையில் நீர் இல்லை எனக்கூறி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அநீதி இழைத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இங்கு அணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் இன்னும் பாதிப்பு ஏற்படும். இதனால் தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகள் கர்நாடகாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் கூட கர்நாடகா அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. கடந்த மே மாதம் கர்நாடக அரசு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் அனுமதி கோரிய நிலையில் இப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. அதில் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது. இது மீண்டும் காவிரி விஷயத்தில் பிரச்சனையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் தான் முன்னாள் பிரதமரும், கர்நாடகாவை சேர்ந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வருகை தந்தார். விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார்.
ரங்கநாதர், தாயார் உள்ளிட்ட சன்னதிகளுக்கு பேட்டரி கார் மூலம் சென்று தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை, சால்வை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு, சந்தன அபயஹஸ்தம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளரிடம் கூறியதாவது: "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கோவிலாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்துள்ளேன். எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்திய மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்'' என்றார்.
இதையடுத்து, ‛‛மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்பட்டது'' பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், ‛‛நான் தற்போது வந்துள்ளது சுவாமியை தரிசனம் செய்யவே, கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டது உள்ளிட்ட எவ்வித அரசியல் குறித்தும் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார்.
மேலும் கர்நாடகத்திலிருந்து உபரி நீர் தான் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், "காவிரி பிரச்சினை குறித்து தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கும், முன்பு ஆட்சி செய்தவர்களுக்கும் முழுமையான விவரங்கள் தெரியும். பெங்களுரூவில் மட்டும் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு அனைவருக்கும் முழுமையான குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர்.
இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. அனைவரும் அறிந்தது தான். இது தமிழகத்தில் ஆளும் கட்சிகளுக்கு தெரியும். மேலும், கர்நாடகத்தில் உள்ள பெங்களுரூ உள்ளிட்ட 9 மாவட்ட மக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர்.காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும், அந்த நாள் விரைவில் வரும். அப்போது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்," என்றார்.












Click it and Unblock the Notifications