திருவெறும்பூர் சர்வீஸ் சாலை.. அன்பில் மகேஷ் கொடுக்கும் தொடர் அழுத்தம்.. ஆனாலும் கிடப்பில் திட்டம்..!
திருச்சி: திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கும் விவகாரத்தில் திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தும் கொடுத்தும் திட்டம் கிடப்பில் இருந்து வருகிறது.
திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அங்கு சர்வீஸ் சாலை அமைத்துக் கொடுக்குமாறு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி எம்.பியாக ப.குமார் 10 ஆண்டுகாலம் இருந்த நிலையில் அவரிடம் சர்வீஸ் ரோடு ஒருங்கிணைப்பு குழு மற்றும் திருவெறும்பூர் பகுதி மக்கள் சார்பாக பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதன் மீது அவர் எடுத்த நடவடிக்கை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லாததால் மக்கள் ஒரு கட்டத்தில் அவரிடம் முறையிடுவதை கைவிட்டனர்.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்தால் அன்பில் மகேஷ் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கையில் அவரை கடந்த 2016-ம் ஆண்டு வெற்றிபெற வைத்தனர். ஆனால் 2016-ம் ஆண்டு திமுகவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் துவாக்குடி சர்வீஸ் சாலை விவகாரத்தில் கட்சி பேதங்களை கடந்து மத்திய அமைச்சர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தார் அன்பில் மகேஷ்.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், ஆகியோரை டெல்லிக்கே சென்று சந்தித்து சர்வீஸ் சாலை பிரச்சனை தொடர்பாக விரிவாக அவர்களிடம் எடுத்துக்கூறியிருந்தார். அவர்களும் அன்பில் மகேஷ் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதுமட்டுமல்லாமல் சட்டமன்றத்திலும் இது குறித்து பலமுறை அன்பில் மகேஷ் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த திட்டத்தை இன்னும் கிடப்பில் வைப்பதற்கான காரணம் புரியவில்லை. இதனிடையே துவாக்குடி சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் ஆகியும் அந்தப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளரும், 10 ஆண்டுகாலம் திருச்சி எம்.பி.யாக இருந்தவருமான ப.குமார் மீது சர்வீஸ் சாலை ஒருங்கிணைப்புக் குழுவினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனிடையே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு தமிழக அரசையும், நெடுஞ்சாலை துறையையும் கண்டித்து திருவெறும்பூர் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.