பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
திருச்சி: பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ
கூறியதாவது: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை. திருச்சியில் நாங்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் மேல்முறையீடும் செய்யப் போவதில்லை.

தோ்தல் ஆணையம் வழங்கும் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட உள்ளேன். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். வேட்பாளா் யாா் என்பதைத்தான் மக்கள் பாா்ப்பாா்கள்.
சின்னம் என்பது பிரச்னை கிடையாது. எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அதை எளிதாக மக்களிடம் கொண்டு சோ்ப்போம். பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கு சின்னம் கொடுக்கப்படவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிகவுக்கு பானைச் சின்னம் வழங்கவில்லை. இதைப் பாா்த்துக் கொண்டு இருக்கும் மக்கள் தோ்தலில் தக்க பதிலடி தருவாா்கள்.
தமிழகத்தை வஞ்சிக்கும் மதவாத பாஜகவை அகற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அரசியலில் மதிமுக வலுப்பெற்று பம்பரம் சின்னத்தை மீட்டெடுப்போம். தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
சின்னம் குறித்து தெரியப்படுத்துவோம். இவ்வாறு துரை வைகோ கூறினார்.
திருச்சியில் முதல்வா் பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று வந்த துரை வைகோ புதன்கிழமை காலை முதல் முறையாக நடைபயிற்சிக்கு இடையே திருச்சி உழவா் சந்தை, நீதிமன்றச் சாலையில் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி, தொகுதியின் பிரச்னைகளையும் கேட்டறிந்தாா்.
துரை வைகோவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காத நிலையில் அவா் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், சின்னம் கோரும் இடத்தில் முதலில் பம்பரம் சின்னத்தையும், இரண்டாவதாக தீப்பெட்டி, மூன்றாவதாக கேஸ் சிலிண்டா் எனக் குறிப்பிட்டு முன்னுரிமை அடிப்படையில் வழங்கக் கோரியுள்ளாா். இவற்றில் பம்பரம் சின்னம் இல்லையென்பதால், இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள தீப்பெட்டி சின்னம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இச்சின்னத்தை வேறு யாரேனும் முன்னுரிமை அடிப்படையில் கோரியிருந்தால் கேஸ் சிலிண்டா் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எந்தச் சின்னம் என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications