அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?
சென்னை: தவெக நிர்வாகி அஜிதா ஆக்னலை திமுகவில் இணைப்பதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் டீமிடம் இருந்து சில எச்சரிக்கைகள் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் திமுகவுக்கு வந்த வேகத்தில் வெளியேறியதை போல், மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவெகவின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் அஜிதா ஆக்னல். ஆனால் மாவட்டச் செயலாளர் பொறுப்பு அஜிதா ஆக்னலுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகம் முன் நின்று விஜய்யின் காரினை மறித்தார். ஆனால் விஜய் அஜிதா ஆக்னலிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.

இருந்தாலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தவெக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பாக தவெக தலைமையை அஜிதா ஆக்னல் தொடர்பு கொண்ட போதும், உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
பனையூர் அலுவலகம் சென்ற போதும், யாரையும் சந்திக்க முடியவில்லை என்று தெரிகிறது. இதனால் கட்சிப் பணிகளை நிறுத்திக் கொண்ட அஜிதா ஆக்னலுக்கு நாதகவில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் அழைத்திருக்கின்றனர். இதனால் அஜிதா ஆக்னல் தரப்பு குழம்பி இருக்கிறது. இப்படியான சூழலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷணன் அஜிதா ஆக்னலை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
இதுதொடர்பாக கனிமொழியிடம் அனுமதி பெற்றே இந்த நகர்வை மேற்கொண்டிருக்கிறார். இந்த நகர்வில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பெரிய விருப்பம் இல்லையென்றாலும், கனிமொழி விரும்பியதால் எதுவும் தடுக்கவில்லை. இதன்பின் முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வரும் போது அஜிதா ஆக்னலை சேர்க்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கடைசி நேரத்தில் ஸ்டாலின் டீமிடம் இருந்து ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் முன்னாள் மேனேஜர் பிடி செல்வக்குமார் இப்படிதான் ஸ்டாலின் முன்னிலையில் இணைக்கப்பட்டார். ஆனால் சீட் கிடைக்கவில்லை என்று திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மீண்டும் அப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.
இதனால் கனிமொழி முன்னிலையில் அஜிதா ஆக்னலை திமுகவில் இணைத்திருக்கின்றனர். கனிமொழி தரப்பும் வேகமாக செயல்படும் பெண் நிர்வாகி ஒருவர் மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜிதா ஆக்னலிடம் தேர்தலில் திமுக வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சில விஷயங்கள் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications