அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல்.. விஜய் ரசிகர் மன்ற தலைவர் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக விஜய் ரசிகர் மன்ற தலைவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

சுற்றுலா மாளிகை
இங்கு நாசர் மகன் சதாம் உசேன் (29) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை காவலாளி சதாம் உசேன் வழக்கம்போல் பணியில் இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்த சேசு மகன் பில்லா ஜெகன் (44) மற்றும் 6 பேர் மது அருந்த அறை ஒதுக்குமாறு, காவலாளி சதாம் உசேனிடம் கேட்டுள்ளனர்.

கடுமையாக தாக்கினார்கள்
ஆனால் சதாம் உசேன் அறை தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவரை அடித்து உதைத்து கல்லால் தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

விஜய் ரசிகர் மன்ற தலைவர்
அதன்பேரில் போலீசார் பில்லா ஜெகன் உள்பட 6 பேர் மீது 152, 147, 148, 452, 294 பி, 332, 324, 506(2), 510 ஆகிய பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் பில்லா ஜெகன் தூத்துக்குடி மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார்.

அமைச்சரின் ஆதரவாளர்
மேலும், பில்லா ஜெகன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்த தெற்கு காவல் நிலைய போலீசார் பில்லா ஜெகன் உள்ளிட்ட 6 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான இவர்கள் 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications