சீன் போடாத தம்பி! கிளம்பு கிளம்பு! பாஜக கவுன்சிலரை கலாய்த்த கீதாஜீவன்! வரிந்துகட்டிய அண்ணாமலை!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி.யிடம் தண்ணீர் வரவில்லை என பாஜக கவுன்சிலர் வாக்குவாதம் செய்த நிலையில், ''சீன் போடாத தம்பி, மனு கொடுத்திருகீங்கல்ல கிளம்பு பார்த்துகலாம்'' எனக் கூறி அனுப்பி வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்.
அமைச்சர் கீதா ஜீவன் பலமுறை கூறியும், இருங்க நான் எம்.பி.யிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் எனக் கூறிய பாஜக கவுன்சிலர் கடந்த நான்கரை ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனை இருப்பதாகவும், தாம் கவுன்சிலராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தனது மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

பாஜக கவுன்சிலர் சொன்ன குறைகளை காதுகொடுத்து கேட்ட கனிமொழி அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் வாக்குவாதம் செய்வதிலேயே குறியாக இருந்த அந்த நபர் அங்கிருந்து நகர மறுத்தார். இதனால் பொறுமையிழந்த அமைச்சர் கீதாஜீவனும் திமுக நிர்வாகிகளும் அந்த நபரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த நிகழ்வை கண்டித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளார். மேலும், தனது கட்சி கவுன்சிலருக்கு ஆதரவாக சமூக வலைதளப்பக்கங்களில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
''கோவில்பட்டி நகராட்சி இருபதாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் விஜயகுமார் . கடந்த நான்கரை வருடங்களாக அவரது பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்றும், அவர் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தூத்துக்குடி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மனு கொடுக்க முயற்சித்திருக்கிறார்.''
''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான விஜயகுமாரை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப் படுத்தியிருக்கிறார். திமுக உள்கட்சி அரசியலில், தன்னை கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவராக காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமைச்சர்
கீதாஜீவன், இந்த ஆணவத்தை எல்லாம் அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும். ''

''பொதுமக்கள் பிரச்சினைக்காக, பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுப்பதைத் தடுக்க நீங்கள் யார்? ஒரு வார காலத்திற்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications