கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் - பெட்ரோல் குண்டு வீச்சால் பதற்றம் - போலீஸ் குவிப்பு!
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். பெட்ரோல் குண்டும் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை சந்தன மாரியம்மன் கோவில் கொடை திருவிழாவையாட்டி, கடந்த 10-ந் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது, இரு தரப்பினிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரதப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்தநிலையில், நேற்று இரவு கரம்பவிளையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றபோது, மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 ஆட்டோ, 10 இருசக்கர வாகனங்கள், காவல்துறையினரின் வாகனங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.
மேலும் இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவொருக்குகொருவர் தாக்கிக் கொண்டதில், பாதுகாப்பு பணியிலிருந்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டிஎஸ்பி அருண், காவலர் பால்பாண்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் மணிகண்டன் என்பவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த மோதலின்போது பெட்டோல் குண்டு வீசியதில் மாட்டுக்கொட்டகை தீப்பிடித்து எரிந்துள்ளது. திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. காவல் துறையினரின் இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய இரு தரப்பைச் சேர்ந்த 12 பேரை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பாலாஜி சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டன. கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம், திருச்செந்தூர் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications