திருச்செந்தூர் கோவில் பிரசாதம்.. சாமி பெயரில் விபூதி அடிக்கும் கும்பல் .. நிர்வாகம் போலீஸில் புகார்
தூத்துக்குடி: திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி, Instagram, YouTube, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது திருக்கோயில் நிர்வாகத்தால் அவ்வப்போது காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
04.01.2026 அன்று சமூக ஊடகப் பக்கத்தில், திருச்செந்தூர் கோயில் மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பன்னீர் இலை விபூதி, சந்தனக்காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனப் பொய்யான தகவல்களை வெளியிட்டு, திருக்கோயில் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மோசடியாக பணம் பறிக்கும் நோக்கில் காணொளிகள் வெளியாகி இருந்தது. இது பற்றி காவல்துறையில் கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயர் மற்றும் அடையாளத்தை நிர்வாகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது கோவில் நிர்வாகத்தால் அவ்வப்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சமூக ஊடகப் பக்கத்தில் கோவிலின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாக கூறப்படும் பன்னீர் விபூதி, சந்தன காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என பணம் பறிக்கும் நோக்கில் கும்பல் ஒன்று பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த சமூக ஊடகப் பக்கத்தை உடனடியாக முடக்கவும், இந்த மோசடி செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் ஆன்லைன் சேவைகள், தரிசன முன்பதிவு, நன்கொடைகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெற https//tiruchendurmurugan.hrcetngov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications