திருச்செந்தூர் கோயிலில் நெருங்கி வந்த தூய்மை பணியாளர்கள்.. நடிகை ரோஜா செயலால் கடும் விமர்சனம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசம் செய்ய வந்த நடிகை ரோஜா, தன்னை நெருங்கி வந்து அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக வீடியோ ஒன்று சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.
முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இந்த கோவில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று. இங்கு சுவாமி தரிசனம் செய்ய தவமே இருக்க வேண்டும். அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதற்காக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை என வரிசையாக நடந்தது. கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கும், குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்தது..
பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் மேல் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு,. காலை 9.10 மணிக்கு மூலவர் விமானம் கலசத்திற்கு வருசாபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை அம்மாள் ஆகிய விமான கலசங்களுக்கும் வருசாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் சுவாமி தரினம் செய்தனர்.
இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜா, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.
தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள்.ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர். இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக கேப்சன்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள், தூய்மை பணியாளர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா. ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பற்றி ரோஜா விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications