சசிகலாவை ஈசியாக எடை போட வேண்டாம். வெயிட் அண்ட் சி'.. பல விஷயங்களை போட்டுடைத்த கருணாஸ்!
தூத்துக்குடி; எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவரால் எப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபணம் செய்தவர் சசிகலா. ஆகவே எதையும் ஈசியாக எடை போடக்கூடாது. பொறுத்திருந்து பாருங்கள் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
Recommended Video
நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது, முக்குலத்தோருக்கு தனி இடஒதுக்கீடு அவசியம் ஏன் என்பதை வலியுறுத்தி பேசினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கூவத்தூரில் நடந்தது, சசிகலா வருகை, பிரேமலதா விஜயகாந்ந்த், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது மற்றும் முக்குலத்தோர் இடஒதுக்கீடு என பல விவகாரங்கள் குறித்து பேசினார்.
என்ன நடந்தது
அப்போது கருணாஸ் பேசுகையில், கூவத்தூரில் கருணாஸ் ஆகிய நான் மட்டுமா இருந்தேன்.. அதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். 110க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருந்தார்கள். மேலும் பலர் இருந்தார்கள். அங்கு கருணாஸ் போல் 150க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். என்ன நடந்தது என்று எனக்கு தெரிந்தது. அவங்களுக்கும் தெரியும்.
என்ன பேசினார்கள்
இன்று இப்படி பேசுகிறார். அன்று இப்படி பேசினார் என ஒவ்வொருவரையும் கம்பேரிசன் செய்து ஊடகங்கள் ஒளிபரப்பு செய்கின்றன. அதை இப்போது ஊடகங்கள் செய்தால் அன்றைக்கு என்ன பேசினார்கள். இன்றைக்கு என்ன பேசினார்கள். என்ன உண்மை என்பது தெரிந்துவிடும்-
உண்மை தெரிந்தது
சசிகலா வருவதை பிரேமலதா வரவேற்கிறார். அத்துடன் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டவர் என்று சொல்கிறார். அது 6 கோடி வாக்காளர்களுக்கும் தெரிந்த உண்மை தான்.
தனி இடஒதுக்கீடு
இடஒதுக்கீடு குறித்த கேட்கீறர்கள். தேவர் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எங்களின் 26 ஆண்டுகால கோரிக்கை, அந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் இப்போது தான் வைப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். சட்டமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். முதல்வரிடம் கொடுத்துள்ளேன். அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்.
நீண்ட நாள் கோரிக்கை
எங்களை பொறுத்தவரை மற்ற சமுதாய மக்கள் எப்படி சுபிட்சமாக வாழ வேண்டும் என்று முதல்வர் அவர்கள் நினைக்கிறாரோ, அதைப்போல் முக்குலத்தோர் சமுதாய மக்களும் வாழ வேண்டும் என்று முதல்வர் நினைக்க வேண்டும். மற்றவர்களுக்கு அவர் எப்படி கோரிக்கையை நிறைவேற்ற வழி செய்கிறேன் என்று சொல்கிறோரோ, அதேபோல் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையையும் ஏற்று தேர்தலுக்கு முன்பே அரசாணை வெளியிட வேண்டும். அதை தவிர்த்து அரசியல் சூழலுக்காக, சிலரை சந்தோஷப்படுத்துவதற்காக, பலதரப்பட்ட சமுதாய மக்களை ஒதுக்கிவிட்டு ஏதேனும் ஒரு அரசாணை வெளியிடுவாரானால், அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சசிகலா உறுதுணை
சசிகலா பக்கமா, எடப்பாடியார் பக்கமா என்று கேட்கிறீர்கள், முக்குலத்தோர் படைக்கு அடையாளம் கொடுத்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள். அதற்கு உறுதுணையாக இருந்தவர் சின்னம்மா.என்று பலமுறை கூறியிருக்கிறேன். புரட்சி தலைவி அம்மா அவர்கள் உயிரை கொடுத்து உருவாக்கி கொடுத்த இந்த ஆட்சி கலைந்துவிடக்கூடாது. சின்னமா அவர்கள் உருவாக்கிவிட்டு வந்த ஆட்சிக்கு என்னால் சிறு இடையூறு கூட வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த நிமிடம் வரை அதிமுக தோழமை உறுப்பினராக உள்ளேன். அதை இனியும் தொடருவேன் என்றார்.
நன்றி உணர்ச்சி
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது டிடிவி சொல்லித்தான் என்கிறார்களே என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு கருணாஸ் தனக்கு இதைபற்றி தெரியாது என்றார். தொடர்ந்து செய்தியாளர், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலாதான் என்று சொல்கிறார்களே என்று கேட்டார். அத்துடன் ஒபிஎஸ், இபிஎஸ் இருவருமே சசிகலா வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்றும் செய்தியாளர் கேட்டார். அதற்கு கருணாஸ், "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்ற திருக்குறளை உதாரணமாக காட்டினார். அவங்கவங்களுக்கு மனசாட்சி இருக்கு.. உங்களிடம் கூவத்தூரின் போது நடந்த வீடியோ உள்ளது அதை பாருங்கள் என்றார்.
பிரதமர் மோடி திட்டம்
அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறுவது குறித்த கேள்விக்க, அது அவர்கள் கட்சி பிரச்சனை, நான் முக்குலத்தோர் புலிப்படையைச்சேர்ந்தவன் என்றார். சசிகலா குறித்த கேள்விக்கு சின்னமாதான் பொதுச்செயலாளர்கள் என்று அவர்களும் சொன்னார்கள். எல்லாமே இங்கு மாறுகிறது. காய் நகரத்துகிறார்கள். சராசரி மனிதனாக நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். எந்த காலத்திலும் உண்மை ஒரு போதும் உறங்காது. சசிகலா முதல்வராகக்கூடாது, அதிமுகவின் அதிகாரம் கைக்கு போய்விடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தது பிரதமர் மோடியும். அமித்ஷாவும் தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எடை போட வேண்டாம்
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கூவத்தூரில் பிரதமர் மோடி, தமிழக முதல்வராக கொண்டுவர நினைத்தது வேறு ஒருவர். அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை உடைத்து, நாட்டின் சர்வ அதிகாரமும் உள்ள பிரதமரின் விருப்பத்ற்கு மாறாக வேறு ஒருவரை முதல்வராக தீர்மானித்தவர் சசிகலா அம்மா என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரும் மறக்க முடியாது. எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் எப்பேர்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர் சசிகலா. ஈசியாக எடை போட வேண்டாம். வெயிட் அண்ட் சி' இவ்வாறு கருணாஸ் கூறினார்.