தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. ஷாக் தகவல்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட கேட்டமைன், சரஸ் எனும் விலையுயர்ந்த போதைப்பொருளை எங்கு கடத்தி செல்ல திட்டமிட்டார், யாரிடம் இருந்து இது வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு படகில் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 3 நாட்களாக மரைன் போலீசார் அப்பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

3 நாட்களாக நடத்திய தொடர் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு பகுதியில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் முறப்பநாடு சென்று குறிப்பிட்ட வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் ஒரு வீட்டில் பைகள் கிடந்துள்ளது. இதை திறந்து பார்த்த போது அது போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. கேட்டமைன் மற்றும் சரஸ் என்ற விலையுயர்ந்த போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 30 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக முறப்பாடு பகுதியை சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படத்தனர். நுண்ணறிவு பிரிவு போலீசார் துரைப்பாண்டியனை கைது செய்து போதைப்பொருள் எப்படி கிடைத்தது? எங்கே கடத்தி செல்ல இருந்தது? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications