கடமை கண்ணியம், கட்டுப்பாடு அவசியம்... தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் - மு.க ஸ்டாலின்
சோதனைகள், அவதூறுகளை கடந்து மக்களின் பேரன்போடு சாதனைகள் படைத்துள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: கடமை கண்ணியம், கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடியில் உள்ள திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த அண்ணா தலைமையில் திமுக ஆட்சியமைத்த நாள். சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள் அத்தனையும் கடந்து மக்களின் பேரன்போடு எத்தனை சாதனைகள் படைத்துள்ளோம்.

மிகப்பெரிய வெற்றி
பெரியார், அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் திமுக வாளும் கேடயமுமாகத் தமிழ்நிலத்தை என்றும் காக்கும்.
பேரறிஞர் அண்ணா சொன்னது போல் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

நம்பிக்கை அவசியம்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களை வாழ்த்துகிறேன். பின்னர் பாராட்டும் வகையில் பணி செய்ய வேண்டும். மேயர் என்பது பதவி அல்ல. பொறுப்பு என கருணாநிதி சுட்டிக்காட்டினார். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும் என்றார். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூனி குருகி நிற்கிறேன்
நமது கூட்டணியில் இடம் பெற்று உள்ள கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி ஒப்படைத்தோம். அங்கு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறு நடந்த காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கூனி குறுகி நிற்கிறேன். ஆகையால் அந்த தவறை செய்தவர்கள் உடனடியாக திருந்த வேண்டும். ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். இல்லையென்றால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினேன்.

உறுதியாக நடவடிக்கை
இது செய்திக்காகவோ, கூட்டணி கட்சியினரை திருப்தி படுத்துவதற்காகவோ அல்ல. தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காக அல்ல. நிச்சயமாக, உறுதியாக அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லையென்றால் உரிய நடவடிக்கையை நான் எடுப்பேன் என்பதை தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்த உள்ள இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்து கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.திமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் திமுகவினரை எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் நடவடிக்கை நிச்சயம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications