சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன்.. சடலமாக மீட்கப்பட்ட 5 பேர்.. நிவாரணம் அறிவித்த முதல்வர்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சடலங்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மோசஸ், வசந்தா, ரவி, ஒன்றரை வயது குழந்தையான ஸ்டாலின் ஹெத்சியா கிருபா, சைனி கிருபாகரன், ஜெனிட்டா எஸ்தர் ஹெர்சோம் ஆகியோர் கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளைக்கு சனிக்கிழமை அன்று அவர்களது சொந்த ஆம்னி வேனில் வந்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி - மீரான்குளம் இடையே சனிக்கிழமை மாலை ஆம்னி வேன் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ஆம்னி வேன் கிணற்றுக்குள் மூழ்கியது. அந்த வேனில் இருந்த ஷைனி கிருபாகரன், ஜெனிட்டா, எஸ்தர் ஹெர்சோம் ஆகிய மூவரும் வெளியே தப்பி வந்துள்ளனர்.
மேலும் இந்த வாகனத்தில் இருந்த மோசஸ், வசந்தா, ரவி, கெஞ்சி அல்கிருபா ஒன்றரை வயது குழந்தையான ஸ்டாலின் ஹெத்சியா கிருபா ஆகிய ஐந்து பேரும் உள்ளே கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். தப்பி வந்த மூவரும் அந்த வழியாக வந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறை, காவல்துறையுடன் உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கிணறு 50 அடிக்கு மேல் ஆழமாக இருந்ததாலும் அடியில் சக்தியாக இருந்ததாலும் மீட்பு பணி சவாலாக இருந்தது. முதலில், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் கிரேன் மூலம் வேனை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இந்த முயற்சிகள் நான்கு முறை தோல்வியடைந்தன. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் உயர் அதிகாரிகள் மீட்பு பணியை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.
பின்னர், 4 மணி நேர நீண்ட போராட்டத்துக்கு பின், ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது. வேனில் இருந்து பெண் உள்பட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் ஒரு ஒன்றரை வயது குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம்-2 கிராமத்தில் கிணற்றில் விழுந்த ஐந்து நபர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கரூரில் ஆம்னி பஸ் - சுற்றுலா வேன் மோதி சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications