"இந்து தீவிரவாதி" வலுக்கும் எதிர்ப்பு.. அரவக்குறிச்சியை போல் ஒட்டபிடாரத்திலும் கமல் பிரச்சாரம் ரத்து
ஒட்டப்பிடாரம்: இந்து தீவிரவாதி என்ற கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து அரவக்குறிச்சியை போல் ஒட்டப்பிடாரத்திலும் கமல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.
அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை என்றார் கமல். இந்த நிலையில் இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆணையத்தில் புகார்
கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரத்தில்
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் நேற்று கமல்ஹாசன் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஒட்டப்பிடாரத்தில் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது.

பிரச்சாரம் ரத்து
கமல் கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துள்ளதால் அவரது ஒட்டப்பிடாரம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் திருப்பரங்குன்றத்தில் நாளை திட்டமிட்டபடி பிரசாரம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலின் கருத்து
கமல் தெரிவித்த கருத்து தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல் ஆங்கில ஊடகங்களிலும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications