தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம்! காசோலை வழங்கிய கனிமொழி
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதற்கான காசோலையை கனிமொழி எம்.பி. இன்று நேரில் வழங்கினார்.
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியோடு கூடுதல் நிதியாக இன்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

கூடுதலாக தலா 5 லட்சம்
அந்த விசாரணை ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

நவம்பர் 16 உத்தரவு
செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட கடந்த மாதம் 16ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

காசோலை வழங்கிய கனிமொழி
இதனிடையே இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அறிவித்த கூடுதல் நிவாரணத் தொகையான தலா 5 லட்சத்திற்கான காசோலையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் வழங்கினார்.












Click it and Unblock the Notifications