தினமும் 25,000 பேருக்கு சுடச் சுட உணவு வழங்கும் கனிமொழி! ஹைஜீனிக் முறையில் பேக் செய்து விநியோகம்!
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கனிமொழி எம்.பி. தனது சொந்த நிதியின் மூலம் தினமும் 25,000 பேருக்கு சுடச் சுட உணவு வழங்கி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். ஒரு சிலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 3 நாட்களாக உணவு சமைத்து விநியோகம் செய்து வருகிறார் கனிமொழி எம்.பி.

பெரிய, பெரிய தேக்ஸாக்களில் லெமன் சாதம், பிரிஞ்சி சாதம் என வெரைட்டி ரைஸ்கள் சமைக்கப்பட்டு சுடச் சுட அவைகள் வேனில் எடுத்துச்செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகின்றன. கனிமொழி எம்.பி.யின் சொந்த செலவில், தனிப்பட்ட முயற்சியில் இது முன்னெடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் உணவு விநியோகம் செய்தாலும் கூட அவர்களுக்கு பக்கபலமாக தூத்துக்குடி தொகுதி எம்.பி. என்ற முறையில் கனிமொழியும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இப்போது தான் படிப்படியாக மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. நேற்றுக்கு இன்று பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சிறியளவில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும் முழுமையாக வெள்ள நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் நேரு தூத்துக்குடியிலேயே முகாமிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.

தூத்துக்குடியை போலவே கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் உணவு சமைத்து கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி எம்.பி. உணவு வழங்கி வருகிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் நேற்று முன் தினமெல்லாம் தூத்துக்குடியில் உணவு சமைத்து விநியோகம் செய்யும் அளவுக்கு நிலைமை இல்லை. அந்தளவுக்கு மிக மோசமாக இருந்தது.
இதனால் மதுரையில் உணவு சமைக்கப்பட்டு அதனை 2 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் வேனில் ஏற்றிச் சென்று உணவு விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications