அப்படியே பிச்சு எடுத்து.. மெல்ல மெல்ல கடிச்சுச் சாப்பிட்டா.. ஆஹா... கோவில்பட்டி கடலை மிட்டாய்
கோவில்பட்டி: 1920-ம் ஆண்டு கோவில்பட்டியில் பொன்னம்பல நாடார் உருவாக்கிய கடலை மிட்டாய் எனும் அற்புத நொறுக்கு தீனியின் கண்டுபிடிப்புக்கு 100 வயது.. கடலை மிட்டாயின் நூற்றாண்டில் அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் கிடைத்திருக்கிறது புவிசார் குறியீடு எனும் அங்கீகாரம்.
Recommended Video
கோவில்பட்டி நகரம் அதை சுற்றிய 5 கி.மீ சுற்று வட்டாரத்தில் எப்போதும் கடலையை வறுக்கும் சப்தங்கள் கேட்கலாம். 100 ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னம்பல நாடார் தயாரிக்க தொடங்கியது இந்த கடலை மிட்டாய்.
இப்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000 குடும்பங்கள் கடலை மிட்டாய் தொழிலை நம்பி இருக்கின்றன. கோவில்பட்டியில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி ஏற்றுமதியாளர்கள் இல்லாத போதும் பல நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு- சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அதிக வாய்ப்பு!
கோவில்பட்டி குதூகலம்
மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கடலைமிட்டாய் நிறுவனங்கள் இயங்கும் கோவில்பட்டியின் நீண்டநாள் கனவே இந்த புவிசார் குறியீடுதான். இந்த புவிசார் குறியீடு இப்போது கிடைத்துவிட்டது. இதனால் கோவில்பட்டி குதூகலத்தில் இருக்கிறது. புவிசார் குறியீடு எப்படி உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கடலைமிட்டாய் தயாரிப்பாளர்கள் சங்க செயலர் கண்ணனை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சார்பாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டோம்.
என்ன வித்தியாசம்?
அவர் நமக்கு அளித்த பேட்டியில், ஒரு நாளைக்கு 20 ஆயிரம் கிலோ முதல் 50 ஆயிரம் கிலோ வரை கோவில்பட்டியில் கடலைமிட்டாய் தயாரிக்கப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை மண்டவெல்லம் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். இதுதான் கோவில்பட்டி கடலை மிட்டாயின் அடிப்படை சுவைக்கு காரணம். பல்வேறு கிராமங்கள், நகரங்களில் தயாரிக்கும் கடலை மிட்டாய் இனிப்பு சுவை மட்டும் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் குளுகோஸ், ஜீனி ஆகியவை பயன்படுத்துவது.
புவிசார் குறியீடும் நன்மையும்
கோவில்பட்டி கடலை மிட்டாயில் மண்டவெல்லம் பயன்படுத்துவதால் கடலை பருப்பின் சுவை அதிகமாக கிடைக்கும். இனிப்பு சுவை அதற்கேற்றார் போல் அமையும். தற்போது இந்த புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் எங்களது பொருட்களின் தரத்தை உறுதி செய்திருக்கிறோம். இந்த புவிசார் குறியீடு எங்களது சங்கங்கள் மூலமே வழங்கப்படும். அதுவும் உரிய விதிமுறைகளை பின்பற்றினால்தான் புவிசார் குறியீடும் கிடைக்கும்.
மக்கள் வாழ்வாதாரம் மேம்படும்
புவிசார் குறியீடுடன் ஏற்றுமதி செய்யப்படுவதால் கூடுதல் ஆர்டர்கள் கிடைக்கும். இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 5,000 குடும்பங்களின் அடிப்படை வழ்வாதாரமும் மேம்பாடும். இவ்வாறு கண்ணன் தெரிவித்தார். கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் தாம்பூல பொருட்களில் ஒன்றாக கடலை மிட்டாய் இடம்பெறும். அந்த அளவுக்கு தங்களது வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்ட கடலை மிட்டாய்க்கு கிடைத்திருக்கும் புதிய அங்கீகாரம் அப்பகுதி மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை பரவட்டும்.