குலசேகரப்பட்டினம் மாங்கனி திருவிழா.. பேயுருவத்தில் சிவனிடம் ஐக்கியமான காரைக்கால் அம்மையார் கதை
தூத்துக்குடி: பெண்ணாக பிறந்து பேய் உருவம் கொண்டு, கயிலாயத்தில் கால் வைக்க மனமில்லாமல் தலையாலேயே நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார் காரைக்கால் அம்மையார். யார் இந்த காரைக்கால் அம்மையார்? பெண்ணாக இருந்த அவர் பேயாக மாறியது எப்படி என்று தெரிந்து கொள்வோம். குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் மாங்கனி திருவிழாவிலும் பங்கேற்போம்.
காரைக்கால் அம்மையார்: 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் அவதாரம் பற்றியும் அவருக்கு இறைவன் வைத்த சோதனையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேவர் குல வீணை வித்வானாகிய தும்புருவின் புத்திரியான சுமதி, சிறந்த சிவபக்தை. ஒரு நாள் அவர்கள் இல்லம் வந்த துர்வாச முனிவரை, சிவ வழிபாட்டில் மூழ்கியிருந்த சுமதி கவனிக்காததால், கோபம் கொண்டு சுமதியை மானிடப்பிறப்பு எடுக்க சாபமிட்டார். இதனால் பூவுலகில் அவதரித்தார்.

சிவபெருமான் மீது பக்தி: காரைக்கால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காரை வனமாக இருந்தது. இங்கு சிறந்த வைசிய குடும்பத்தில், தனதத்தன் - தர்மவதி தம்பதியருக்கு மகளாக அவதரித்தாள். மிகச் சிறந்த அழகிய பெண்ணாக வளர்ந்தாள். அவருக்கு புனிதவதி எனப் பெயரிட்டனர். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். திருமண வயது அடைந்தவுடன், நாகபட்டினத்தில், பொன் ஆபரண வியாபாரியான பரமதத்தனை மண முடிந்து வைத்தனர். கணவனுக்கு தொண்டு செய்து இறைவனைப் பாடியபடியே திருமண வாழ்க்கையை தொடர்ந்தார்.
மாம்பழம்: ஒருநாள் பரம தந்தனிடம் ஒரு வியாபாரி 2 மாம்பழங்களை கொடுத்தார். அதனை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினார். அப்பொழுது ஒரு அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார்.அவருக்கு உணவு படைத்து ஒரு மாங்கனியும் அளித்து, அவரை வணங்கி வழி அனுப்பி வைத்தார். பின்னர் மதிய உணவிற்கு வீடு வந்த பரமபத்தன், மாங்கனியை தரும்படி கேட்டார். ஒருமாங்கனியை தந்தார். அது மிகவும் ருசியாக இருந்ததால், இன்னொரு மாங்கனியையும் கேட்டார். புனிதவதி சமையல் அறை சென்று, சிவபெருமானை வேண்டினார்."மெய் மறந்து நினைந்து, உற்ற இடத்து உதவும் விடையவர்தான் தம்மனம் கொண்டு உணர்தலுமே" என்றதும், அவரது கையில் ஒரு மாம்பழம் வந்தது. அம்மையார் அதனை தன் கணவனுக்கு கொடுத்தார். அது மிகவும் அதீதமான சுவையுடன் இருந்தது. அதனால் புனிதவதி அம்மையாரிடம் கேட்க, நடந்தவற்றை கூறினார்.
ஆனால் அதை நம்பாத பரமதத்தன், புனிதவதி அம்மையாரிடம், இது உண்மையெனில், மற்றுமொரு மாம்பழத்தை வரவழைக்க ஆணையிட, அது போலவே சிவ பெருமானை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அவரது கையில் மாம்பழம் வந்தது. இதைக்கண்ட பரமதத்தான், புனிதவதி ஒரு தெய்வப் பிறவி என்பதை அறிந்து, அவருடன் தாம்பத்தியம் கொள்வது கூடாது என்று தீர்மானித்தான்.
தெய்வப்பெண்: நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார். மதுரை சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் குலசேகரப்பட்டினம் சென்று வாணிபம் செய்து வந்தார்.
பேய் உருவம்: இது அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு குலசேகரப்பட்டினம் சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார். பேய் உருவம் தாங்கிய அம்மையார், 'அற்புத திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார்.
கயிலாயத்தில் காரைக்கல் அம்மையார்: கயிலாயத்தில் அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.
சிவனிடம் கேட்ட வரம்: அம்மையாரிடம் என்ன வேண்டும் என்று சிவன் கேட்க, "பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டெனில் உன்னை மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி, அறவா நீ ஆடும் பொழுது, உன் அடியின் கீழ் இருக்க" என்று வேண்டினார். சிவபெருமான் அப்படியே அருள்செய்தார். அதன்பிறகு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், அங்கும் தலைகீழாகவே நடந்து வந்து தரிசனம் செய்தார். அவருக்கு சிவ பெருமான் தன் திருத்தாண்டவம் காட்டி, திருவாலங்காட்டிற்கு வந்து தன் திருவடிக் கீழ் இருக்க அருளினார். காரைக்கால் அம்மையாரை இசைத்தமிழால் இறைவனைப் பாடியவர்களில் முதலாமவர் ஆகும். இவர் இயற்றிய "அற்புதத் திருவந்தாதி" "திருவாலங்காட்டு சிவப்பதிகம்" "திரு இரட்டை மணிமாலை" போன்ற நூல்களை இயற்றி தமிழுக்கு பெருமை சேர்த்தார்.
குலசை மாங்கனி திருவிழா: குலசேகரப்பட்டினத்தில் பேயுருவம் பெற்ற அன்னையை வணங்கும் வகையில் இன்றைக்கும் மாங்கனி திருவிழா வரும் 3ஆம் தேதி நடைபெறுகிறது. காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. நாளை மறுநாள் ஜூலை 03ஆம் தேதி திங்கட்கிழமை மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை குலசேகரன் பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த அம்மன் கோயிலில் வைத்து நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுகுழுவினர் ஆசிரியர் திரு. வள்ளி நாயகம் அவர்கள் தலைமையில் காரைக்காலம்மையார் பதிகங்களையும் மற்றும் காரைக்காலம்மையார் பெரியபுராணம் பாடல்களையும் திருமுறை விண்ணப்பம் செய்வார்கள்.
மேலும் மழை வளம் செழிக்க சம்பந்தரின்மழைப்பதிகப் பாடல்களைப் பாடி விண்ணப்பம் செய்யப்படும். மாலை 4.30 மணிக்கு மேல் குலசேகரன்பட்டினம் வடக்கூரில் அமைந்துள்ள காரைக்காலம்மையார் மண்டபத்தில் வைத்து மாங்கனி பூஜை நடைபெற்று மாங்கனி பிரசாதம் வழங்கப்படும். மதியம் மாகேஸ்வர பூஜை உண்டு. பக்தர்கள் அனைவரும் திருமுறை விண்ணப்பத்திலும் மாங்கனி பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுமாறு வேண்டுகிறோம்.












Click it and Unblock the Notifications