ஆன்மீக சுற்றுலா நகரமான திருச்செந்தூர்- சென்னை இடையே நேரடி ரயில் சேவை.. பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடி: சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சுற்றுப் பாதையில் செல்வதால் நேர் பாதையில் கார்டு லைனில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு மற்றும் ஒரு ரயில் இயக்க வேண்டும் என்பது திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கையாக விடுத்துள்ளார் அந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. ஆனால் சென்னையில் இருந்து நேரடியாக வருவதற்கு சரியான ரயில்கள் இல்லை.. இத்தனைக்கு மிகவும் அதிகமான மக்கள் ரயிலை விரும்பும் வழித்தடமான திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருச்சி வழித்தடத்தில் இருக்கிறது. ஆனாலும் திருச்செந்தூருக்கு போதிய ரயில்கள் இல்லை. ஒரே ஒரு ரயில் தான் சென்னையில் இருந்து தினசரி சென்று வருகிறது.

ஆனாலும் திருச்செந்தூர்- சென்னை இடையே தினசரி இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சுற்றுப் பாதையில் சென்று வருகிறது. அதன்படி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருச்சி வரை நேர் வழியாக செல்கிறது. அதன்பின்னர் திருச்சிக்குப் பின்னர் தஞ்சாவூர் வழியாக இந்த ரயில் சுற்று பாதையில் செல்வதால் அதிக நேரம் பிரயாணம் செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாக பலர் திருச்செந்தூரில் இருந்து சென்னை ரயிலில் செல்ல இந்த ரயிலை தேர்வு செய்ய ஆர்வம் காட்டுவது இல்லை.
எனவே திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மற்றொரு நேர்வழிப் பாதையான கார்டு லைனில் ரயில் சேவை துவங்க வேண்டும் எனவும் இதனால் சென்னையில் குடி பெயர்ந்து தங்களது வாழ்வாதாரத்திற்காக சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் அதுவும் குறிப்பாக திருச்செந்தூர் சுற்றுவட்டார மக்கள் எளிதில் வந்து செல்ல இந்த ரயில் சேவையை விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொது மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்செந்தூர் பகுதியில் உள்ள வழிபாட்டு தலம், குலசேகரப்பட்டினத்தில் தற்போது வரவுள்ள ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலையம், அப்பகுதியில் சுற்றுலா மீனவ கிராமங்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பெரிய திட்டங்களுக்கும் அப்பகுதியில் வாழும் கிராமப்புற மக்களுக்கும் பேருதவியாக இந்த ரயில் சேவை இருக்கும் என்பதால் மத்திய அரசு செவி சாய்த்து உடனடியாக கூடுதல் ரயில் இயக்க ரயில்வே துறை ஆவண செய்ய வேண்டும் என்பதும் அப்பகுதி பொதுமக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications