தீவிரவாதம் குறித்து பிரதமர் சொல்றதுதான் சரி.. சொல்கிறார் தமிழிசை!
தூத்துக்குடி: தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி சொல்வதுதான் சரி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் எனக்கூறினார்.
கமலின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரவக்குறிச்சியில் கமலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்துவாக இருக்க முடியாது
இந்நிலையில், கமலின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். 'நியூஸ் எக்ஸ்' டிவிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்த நபர் இந்துவாக இருக்க முடியாது.

மோடி கருத்து
இந்து எனக்கூறும் நபர் தீவிரவாதி கிடையாது. எந்த ஒரு தீவிரவாதியும் இந்து என உரிமை கோர முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பது இந்து மதத்தின் ஆழமான நம்பிக்கை. அதில், மக்களை கொல்லவோ, துன்புறுத்தவோ இந்துக்களுக்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

மோடிதான் சரி
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக பாஜக தலைவரான தமிழிசை. அப்போது பேசிய அவர்,
தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது, பிரதமரின் கருத்து மிகச் சரியானது. கமல்ஹாசனின் கருத்து தவறானது.

திரும்பப்பெற வேண்டும்
கமல்ஹாசனை யாராவது தூண்டி விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் கமல் வேண்டுமென்றே பேசுவது போல்தான் தெரிகிறது. தனது கருத்தை கமல்ஹாசன் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications