2047ல் இந்தியா உலக வல்லரசு.. லட்சியத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் மோடி.. எல். முருகன் பெருமிதம்
தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம். அதை நோக்கி பிரதமர் மோடி லட்சியத்தோடு அடியெடுத்து வைத்துள்ளார் என்றும் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். இந்தியில் மோதி என அழைக்கப்படும் தூத்துக்குடி முத்து நகருக்கு இன்றைக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்துக்கு வழங்கிட வந்துள்ளார்.

மோடி எப்போது எல்லாம் தமிழகத்துக்கு வருகிறாரோ அப்போது எல்லாம் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். கடந்த முறை தமிழகத்துக்கு வந்து திருச்சி விமான நிலையத்தை தொடங்கி வைத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்தார்.
இரண்டே மாதங்களில் இப்போது ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களை கொடுக்க வந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது.
உலகத்திலேயே சந்திரனின் தென் துருவத்தில் கால்பதித்தது விண்கலம் சந்திராயன் 3. இதை அனுப்பியவர் பிரதமர் மோடி. விண்வெளி துறையில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்து வருகிறது இந்தியா.
பிரதமர் மோடியின் ஒரே எண்ணம் 2047-ல் இந்தியா உலக வல்லரசாக இருக்க வேண்டும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே. அதை நோக்கி பிரதமர் மோடி லட்சியத்தோடு அடியெடுத்து வைத்துள்ளார் என்று எல்.முருகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications