வெளிநாட்டிலிருந்து திமுக தலைவர்கள் மீது அவதூறு! நாதக புள்ளி கைது! மனநலம் சரியில்ல.. பரபர வாக்குமூலம்
தூத்துக்குடி: திமுக தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நாதக பிரமுகர் நேற்று சொந்த ஊர் திரும்பிய நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தான் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்து எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
என்ன டக்குனு மாறிட்டாரு.. திமுக அரசுக்கு 'சப்போர்ட்’.. யூ-டர்ன் போட்ட கார்த்தி சிதம்பரம்!
போலி கணக்குகள்
போலி கணக்குகள் மூலம் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் மீது அவதூறுகள் அவ்வப்போது பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த செயலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இதனை செய்து வருவதால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள தாமதமாவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு போலிக்கணக்கை பயன்படுத்துபவர்கள், அரசியல் கட்சிகளில் உள்ள பெண் தலைவர்கள் மீதும் ஆபாசமான அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
திமுக தலைவர்கள்
இந்நிலையில், தற்போது இவ்வாறு போலி கணக்கு மூலம் திமுக தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே உள்ள பிரண்டார்குளத்தை சேர்ந்தவர் ஞானராஜ். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் அங்கிருந்தவாறே திமுக வழக்கறிஞர் கிஸ்ஸிங்கர் உள்ளிட்ட தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.
ஞானராஜ்
இந்நிலையில், இது தொடர்பாக வழக்கறிஞர் கிஸ்ஸிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் போலிக் கணக்குகளை ஆராய்ந்ததில் அது வெளிநாட்டு ஐபி முகவரியில் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கை கிடப்பில் போட்டனர். இந்நிலையில் ஞானராஜ் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளது. விசாரணையில் அவருக்கும், வழக்கறிஞர் கிஸ்ஸிங்கருக்கும் இடையே இருந்த பழைய பகையை மனதில் கொண்டே இம்மாதிரியாக அவதூறு பரப்பியதாக சொல்லப்படுகிறது.
திருப்பம்
இதனையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதாவது நீதிபதியின் முன் ஞானராஜ், தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், எனவே மருந்து எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதித்த பின்னர் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். இதை எதிர்பாராத காவல்துறையினர் ஞானராஜை மருத்து பரிசோதனைக்கு உட்படுத்த தயாராகி வருகின்றனர்.