சாத்தான்குளம் வழக்கு.. 4 மாதம்தான்.. விசாரணையை முடிக்க இறுதி கெடு.. மதுரை ஹைகோர்ட் உத்தரவு
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை முடிக்க, இறுதியாக 4 மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, கடையை அடைப்பது தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரையும் இரவு முழுவதும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததால், கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி செல்வராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த வழக்கு விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, வழக்கு விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை விசாரணை நீதிமன்றம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 5 மாத கால கூடுதல் அவகாச வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் தரப்பில், இந்த வழக்கில் 105 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த வாரம் தாக்கல் செய்யபட்டுள்ளது. 105 சாட்சிகளில் 55 முதல் 60 சாட்சிகளே முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு 2 நாட்கள் வழக்கு கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
குற்றவாளிகளாகக் கருத்தப்படும் 9 நபர்களின் வழக்கறிஞர்களும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வருவதால், காலதாமதம் ஏற்படுகிறது. எனவே 4 மாத கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, உயர்நீதிமன்ற நீதிபதி, இறுதியாக 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications