சாத்தான்குளம் மரணம்: போலீஸ் ஸ்டேசனில் இருந்த அனைவரும் கூண்டோடு ட்ரான்ஸ்பர் - 30 பேர் நியமனம்
சத்தான் குளம் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 30 பேர் அங்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விசாரணைக்கு உயிரோடு அழைத்துச்சென்ற காவலர்கள் இருவரையும் சடலமாகத்தான் உறவினர்களிடம் ஒப்படைத்தது. தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் பேசப்படுகிறது. இருவரின் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர்கள் உள்பட 30 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. ட்விட்டரில் உள்ளூர் மக்கள் முதல் உலக பிரபலங்கள் வரை பதிவிட்டு காவல்துறையினருக்கு எதிராக கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பிற காவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், புதிய ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அங்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பெர்னட் சேவியர், சாத்தான் குளம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கோவில்பட்டி மற்றும் புதுக்கோட்டையில் பணியாற்றும் மணிமாறன், முத்துமார் ஆகிய இருவர் சப் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும் 7 தலைமைக் காவலர்கள், ஒரு பெண் தலைமைக்காவலர், 16 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்களை புதிதாக நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரையும் சேர்த்து மொத்தம் 30 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications