ஆசையாக பழச்சாறு குடித்த பள்ளி மாணவி பரிதாப பலி.. தாய் ஐசியூவில்.. கயத்தாறில் கடும் அதிர்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி (36). இவர்களின் மகளான லட்சுமிபிரியா (14) அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்ததும் மாணவி லட்சுமிபிரியாவை தாய் சாந்தி வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் பழச்சாறினை அவர்கள் வாங்கியுள்ளனர்.
வீட்டுக்கு வந்ததும் தாயும் மகளும் பழச்சாற்றை குடித்துள்ளனர். பழச்சாறு குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயத்தில் அவர்கள் அலறியுள்ளனர். இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து இருவரையும் கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மாணவி லட்சுமி பிரியாவின் உடல்நிலை மோசமடையவே அவரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலமாக நேற்று சென்னை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே லட்சுமி பிரியா உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், மாணவி உயிரிழந்தது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனிடையே, தாய் சாந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் 5-ஆம் ஆண்டு மாணவி தற்கொலை- மாணவர்கள் அதிர்ச்சி!
பழச்சாறு குடித்த மாணவி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி, கோவில்பட்டி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல்களில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்ணும் சில உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. இதற்கு முன்பு கேரள மாநிலம் காசர்கோட்டில் ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 17 வயது மாணவி உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், இச்சம்பவமானது ஷவர்மா உணவு மீது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. இதேபோல, கடந்த ஜூன் மாதம் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது