கஞ்சா போதை பொருள்.. அப்போ டாஸ்மாக் மதுபானம் என்ன "நாழிக்கிணறு தீர்த்தமா"? சீமான் விமர்சனம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று, தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக்காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சணை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதாக கூறினார். மேலும் கோயில்களில் தமிழ் வழிப்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாகவும் திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
யார் அந்த “ரோலக்ஸ்?” போதை பொருளின் “ஹப்” குஜராத்.. கடத்தலுக்கு காரணம் மத்திய அரசு - பொன்முடி அதிரடி
போதை பொருள் ஒழிப்பு
தமிழ்நாடு அரசின் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் கூறி வருகிறார். முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் நிகழ்ச்சி குறித்தும் அவர் கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, "குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால்தான் திமுக அரசு குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறியிருந்தார்.
வேண்டுதல்
இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக்காணிக்கை செலுத்தி துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், போதை பொருள் ஒழிப்பு குறித்து மாநில அரசை விமர்சித்திருந்தார். அவர் தனது பேட்டியில் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்பது பெயர் அளவிலே உள்ளது. கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்." என்று வலியுறுத்தினார்.
எச்.ராஜாவுக்கு நன்றி
மேலும், "தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும். ராகுல் காந்தியின் நடைப்பயணம் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். ராகுல்காந்திக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் எச் ராஜா செய்து வருகிறார் அவருக்கு எனது நன்றி. திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆடியோ வெளியிட்டு மனசாட்சியோடு பேசிய திமுக கவுன்சிலருக்கு எனது நன்றி" என்றும் கூறினார்.
நாழிக்கிணறு தீர்த்தமா?
தொடர்ந்து பேசிய அவர், "கஞ்சா, குட்கா ஹெராயின், போன்றவை முருகன் ஆணையாக போதை பொருள்கள் என ஒத்துக் கொள்கிறேன். ஆனால் டாஸ்மார்க் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா?" என்று கேள்வியெழுப்பினார். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் போதை பொருட்களை ஒழிப்பதற்கு அனைத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார். இதனை குறிப்பிட்டு பேசிய சீமான், சட்டப்பேரவையில் குட்காவோடு நுழைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறாரா? என்று கேள்வியெழுப்பி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.