இனி விஜய் பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும்.. மாற்று திட்டத்தை கொடுத்து சீமான் அட்வைஸ்!
தூத்துக்குடி: தவெக தலைவர் விஜய் வரும் காலங்களில் பிரச்சாரப் பயணமாக அல்லாமல் பொதுக்கூட்டங்களை மட்டும் நடத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார். விஜய் கரூருக்கு வந்ததால் தான் கூட்டம் கூடியது என்று இருக்கும் சூழலில், அவர் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் தவிர்த்து 2ஆம் கட்டத் தலைவர்கள் பலரும் தலைமறைவாகி இருக்கின்றனர். இதனால் தவெகவின் அடுத்த திட்டம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் விவகாரம் மற்றும் விஜய்யின் நிலைப்பாடுகள் குறித்து சீமான் பேசி இருக்கிறார்.

இதனிடையே ஆடு மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு ஆகியவற்றை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல் மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதனால் திருச்செந்தூர் கடலுக்கு சென்று சீமான் ஆய்வு நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லை.. மக்களுக்கு தான் பாதிப்பு இருக்கிறது.
கரூர் விவகாரம் தொடர்பாக சட்ட முறைகளில் கருத்து சொல்ல முடியாது. ஆனால் விஜய் வரும் நாட்களில் பிரச்சாரப் பயணமாக தெருக்களில், சாலைகளில் செல்லாமல், பொதுக் கூட்டமாக நடத்திக் கொள்ள வேண்டும். ஒரு மைதானத்தில் பொதுக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, அனைவரையும் அழைத்து கொள்ளலாம். பிரச்சாரப் பயணத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்று கருதுகிறேன்.
கரூர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடே விஜய்க்கு ஆதரவு அளிப்பது தான். விஜய் கரூருக்கு வந்ததால் தான் கூட்டம் கூடியது. அப்படி இருக்கும் போது வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் விஜய் பழியை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருப்பது சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இதில் அரசு, விஜய் ஆகிய இரு தரப்புக்கும் பொறுப்பு இருக்கிறது.
மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. கரூர் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு காவல்துறைக்கு நன்றி சொல்லிதான் விஜய் தனது பேச்சை தொடங்குகிறார். ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டவுடன் பழி போடுகிறார். தவெக கேட்ட மற்ற இடங்களை விட வேலுச்சாமிபுரம் பெரியதாக இருந்ததால், அதனை தந்ததாக போலீசார் கூறுகிறார்கள்.
பாஜக விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறது. விஜய்யுடன் எனக்கு கொள்கை முரண் இருக்கிறது. திராவிடம், தமிழ் தேசிய நேர் எதிரான கோட்பாடுகள். அதனால் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். எங்களின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் கோட்பாட்டை அடமானம் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications