ஸ்டெர்லைட்.. உடனடியாக கொள்கை முடிவெடுங்கள்.. தமிழக அரசுக்கு வலுக்கும் நெருக்குதல்
Recommended Video
தூத்துக்குடி : தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தாலும்., உடனடியாக கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது, தமிழக மக்களையும், போராட்டக் குழுவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டெர் லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த வாஞ்சிநாதன், இது அதிர்ச்சி தரவில்லை.. எதிர்பார்த்ததுதான் என்றார்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுதான் அதிர்ச்சி தருகிறது என்ற அவர், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்பது போல நீதிபதி கோயல் செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு உள்ள வரம்பை மீறி தீர்ப்பை அறிவித்துள்ளனர் என்று கூறிய அவர், ஸ்டர்லைட் நிறுவனத்திற்குப் பாதுகாப்பு தர கலெக்டர் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது என்றும் வாஞ்சிநாதன் கூறினார்.
அதிலும் குறிப்பாக, பாதுகாப்பு தராவிட்டால் ஆட்சியர் மீது நடவடிக்கை என்பது வரம்பு மீறிய உத்தரவு என்றும், இந்த விவகாரத்தில் தற்போது பதில் சொல்ல வேண்டியது தமிழக அரசுதான் என்றும் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
அரசாணையை உடைக்க முடியாது என்று கூறிய முதல்வர், பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.