தூத்துக்குடியில் வீட்டு மனை பட்டா.. கோவில்பட்டி தாலுகா ஆபீஸ்ல நிக்கிறது யார் பாருங்க? வாயிலே என்ன?
தூத்துக்குடி: இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது கோவில்பட்டியில்?
வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியை உறுதிசெய்யும் நோக்கில் வருவாய்த் துறை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டுமனை பட்டாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோல, புறம்போக்கு நிலங்கள் போதிய அளவு இல்லாவிட்டால், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து, கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
ஆதி திராவிடர்: இதுதவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கெனவே கடந்த காலங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வேளாண்மை செய்யும் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும், வேளாண்மை செய்து வரும் இடத்துக்கான நில உரிமை பட்டாக்களும் வழங்கப்படுகிறது.
வீட்டு மனைப்பட்டாக்கள்: அதேசமயம், இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் கிடைக்க கோரி, சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.. தங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என்று, தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், பூம்பூம் மாட்டுக்காரர்களும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில், இன்று கோவில்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் கிராமத்தில், பல வருடங்களாகவே, ஏழை எளிய மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.. இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இதுவரை வழங்கவில்லை.. எனவே, பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டு பலமுறை தாசில்தாரிடம் மனு கொடுத்துவிட்டார்கள்.. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மாவட்ட கலெக்டர்: எனவே, மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக ஆய்வாளர் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.. அப்படியிருந்தும்கூட, இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை என்கிறார்கள். அதனால்தான், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பன், நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு: முன்னதாக, இந்த போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஏராளமான கிராம மக்களும் திரண்டு வந்தனர். அப்போது, இதற்காக ஒரு கழுதையுடன் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.. தாலுகா அலுவலகம் வாயிலிலேயே, கழுதையை நிற்க வைத்து, அதனிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், அனுமதி இல்லாமல் இந்த போராட்டம் நடத்தியதால், அனைவரையுமே போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications