தூத்துக்குடியில்.. அந்த பெண்ணின் பேரை கேட்டதுமே அதிர்ந்த கோயில்.. நடுரோட்டில் சம்பவம்.. இன்னுமா இது?
தூத்துக்குடி: கிறிஸ்தவ பெயர் கொண்டதால் ஒரு பெண்ணின் கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. அந்த பெண்ணுக்கு நடுரோட்டில் மணமகன் தாலி கட்டிய சம்பவம் அதற்கு மேல் பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது-
இந்து மதத்தைச் சேர்ந்த அந்தோணி திவ்யா என்பவரது பெயர், கிறிஸ்தவ பெயர் போல் உள்ளதால் கோயிலுக்குள்ளே திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தம்பதிகள் உறவினர்கள் புடைசூழ சாலையில் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்.. இவருக்கு, அந்தோணி திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்தார்கள்.. தருவைகுளம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா.
மணமக்களுக்கு திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.. தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் செய்து, அங்கிருக்கும் முருகன் சன்னதியிலேயே கல்யாணத்தை முடிக்க அனைவரும் முடிவு செய்தார்கள்..
கல்யாண வீடு: பிறகு, கல்யாணத்துக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டுபோய், கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பித்துவிட்டு வந்தார்கள்.. இதையடுத்து, கல்யாணத்துக்கு இரு தரப்பினருமே தயாராக வந்தனர்.
அப்போது, திடீரென பெண்ணின் பெயர் என்ன? என்று கோயில் நிர்வாகத்தினர் கேட்டிருக்கிறார்கள்.. அந்தோணி திவ்யா என்று சொன்னதுமே, கிறிஸ்தவ பெயராக இருக்கிறது. அதனால், கல்யாணத்துக்கு அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகத்தினர் சொல்லிவிட்டார்களாம்.
சாதி சான்றிதழ்: இதனால் அதிர்ந்து போன பெண்ணின் குடும்பத்தினர், பெண்ணின் சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். உடனே அந்த ஆவணங்களை கோயில் நிர்வாகத்தினர் சரிபார்த்துள்ளனர். அதிலிருந்த கல்விச் சான்றிதழில், "கிறிஸ்தவம்" என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.
உடனே கோயிலுக்குள் திருமணம் நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே கல்யாணத்துக்கு அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினரும், அந்த கோயிலின் பூசாரிகளும் தெரிவித்தார்களாம்.. முகூர்த்த நாளில், முகூர்த்த நேரத்தில் வந்து இப்படி சொன்னதால், பெண்ணின் குடும்பத்தினர் விழித்தனர். கடைசி நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்தனர்.
முகூர்த்த நேரம்: முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், கோயில் நிர்வாகத்திடம் வாக்குவாதத்திலும் அவர்களுக்கு ஈடுபட விரும்பவில்லை.. அதனால், வேறு வழியின்றி, கோயிலுக்கு வெளியே, கல்யாணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, கோயில் வாசலில், நடுரோட்டில், உறவினர்கள், நண்பர்கள் சூழ, இந்த கல்யாணம் நடந்தது.. மணமகள் அந்தோணி திவ்யாவுக்கு, மணமகன் கண்ணன் கோயிலுக்கு வெளியே, ரோட்டில் வைத்தே தாலியை கட்டினார்.
இதுகுறித்து பெண்ணின் தரப்பில் சொல்லும்போது, மணமக்களின் ஆவணங்கள் முறையாக சமர்ப்பித்திருந்தோம். ஆனால், பெயரில் அந்தோணி என்ற கிறிஸ்தவ பெயர் பெண்ணின் பெயரில் இருந்ததால், கோயில் நிர்வாகத்தினர் கல்யாணத்துக்கு மறுத்துவிட்டனர்.
பரபரப்பு: இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்டும், கோயில் நிர்வாகத்தினர் அதனை தரவில்லை.. திருமணத்தையும் நடத்தி வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications