நொறுங்கிடுச்சே.. பாகன் விழுந்த இடத்தையே உற்று பார்த்த தெய்வானை! அப்பிய சோகத்தில் திருச்செந்தூர் யானை
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை, இன்னமும் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை என்றும் பாகன் நினைவிலேயே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. யானையை தற்போது 5 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ள நிலையில், யானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெய்வானை என்ற 26 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு, உதவி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேரையுமே யானை தாக்கி கொன்றுவிட்டது.

இருவருமே யானையை சுற்றிச்சுற்றி வந்து செல்பி எடுத்திருக்கிறார்கள்.. யானையின் துதிக்கையில் முத்தமிட்டபடியும் செல்பி எடுத்திருக்கிறார்கள்.. புதிதாக சிசுபாலன் என்பவர் தொட்டதால், மிரண்டுபோன தெய்வானை, அவரை தூக்கி சுவற்றில் வீசியது. அவரைக் காப்பாற்ற ஓடி வந்த உதயகுமாரையும் துதிக்கையால் தள்ளிவிட்டது. இரண்டு பேரும் சுவற்றில் பலமாக மோதி விழுந்து, படுகாயமடைந்து இறந்துவிட்டனர்.
பாகன் உதயகுமார்: ஆனால், சிறிது நேரம் கழித்துதான், பாகன் உதயகுமாரை அடையாளம் கண்டது. அவரை துதிக்கையால் தடவிக் கொடுத்து, அவரை எழுப்பிவிட முயன்றது.. உதயகுமார் அருகில் மண்டியிட்டு, அவரையே பார்த்துக் கொண்டே இருந்தது..
போலீசார் உதயகுமாரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக எடுக்க முற்பட்டபோதும் எடுக்க விடாமல் தடுத்திருக்கிறது. பிறகு, மற்ற 2 பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில் குமார் 2 பேரும், யானையிடம் அதற்குரிய பாஷையில் பேசி சமாதானப்படுத்திய பிறகே பாகன் உடலை போலீசார் எடுத்துள்ளனர்.
ஆசீர்வாதம்: பிறகு, யானை மீது தண்ணீரை பீச்சியடித்து சாந்தப்படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்குள் கட்டிப்போடப்பட்டது. பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் தான் வெறும் பழங்களை சிறிதளவு சாப்பிட்டுள்ளது. சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும், இயல்பான உணவை இன்னும் சாப்பிடவில்லையாம். இந்த நிகழ்வுக்கு பிறகு, ஆக்ரோஷமாக இல்லையென்றாலும், தெய்வானை யானை சோகத்துடனேயே உள்ளது.. பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வருவதாகவும், பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று உற்று பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனை: இதனிடையே, யானையை 5 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ள நிலையில், யானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவருகிறது.
யானைப்பாகன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அன்றைய தினம் 11 மணியில் இருந்து மாலை வரை அடைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கடை முன்பும் கருப்பு துணி கட்டப்பட்டிருந்தது. யானைக்கு மனஅழுத்தம் ஏற்பட்டால் அது பாகன்களின் வார்த்தைக்குக் கட்டுப்படாது, அது கீழ்படிய மறுக்குமாம்.. அதை சமாதானப்படுத்துவதற்கு ஒரே வழி ஓய்வு கொடுப்பதுதானாம்.. நல்ல சூழலில் ஓய்வெடுக்க வைத்தால் யானை அமைதியாகிவிடும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications