தூத்துக்குடியில் "ஷாக்".. மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி பலி.. "ஃப்ளூ காய்ச்சலா..?" பரிசோதனை தீவிரம்
தூத்துக்குடியில் 6 வயது சிறுமி மர்மக்காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் வேகம் எடுத்திருக்கும் நிலையில், சிறுமியும் ஃப்ளூ வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
சிறுமியின் மரணத்தால் தூத்துக்குடியில் மர்மக்காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பீதியை கிளப்பும் ப்ளூ காய்ச்சல்
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக திடீரென காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்புளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இந்த ப்ளூ காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்தான் அதிகம்
இதனிடையே, நாடு முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தாமாக ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது; மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும்; கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்; கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கர்ப்பிணிகளும், இனைநோய் உள்ளவர்களும் ப்ளூ தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிறுமி
இந்நிலையில்தான், தூத்துக்குடியில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ராஜபாண்டி நகரைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலின் தீவிரம் அதிகரித்ததால் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

மக்கள் பீதி
காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சிறுமிக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டிருந்தது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் சிவக்குமார் கூறுகையில், "உயிரிழந்த சிறுமி கடுமையான காய்ச்சல் பாதிப்பிற்கு பிறகே அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இங்கு வரும் போதே அவருக்கு காய்ச்சல் முற்றி இருந்தது. டெங்கு காய்ச்சலால் சிறுமி இறக்கவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications