விஏஓ கொலையில் அதிர்ச்சி.. "சாவுக்கு முன்னாடி போய் நிக்க வெக்கமா இல்லையா?” வெளியான ‘ஷாக்’ ஆடியோ!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓவாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்க முயன்றதற்காக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர் டிரான்ஸ்பர் கேட்டும் பெற்றுத் தராதது பற்றி விஏஓ சங்கத்தினரை விமர்சித்து பெண் விஏஓ ஒருவர் ஆதங்கத்துடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஏஓ கொலை : தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகேயுள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். அவர் நேற்று தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லூர்து பிரான்சிஸ் பலியானார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கலியாவூர் பகுதியைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவில்பத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் ஆற்றுமணல் திருட்டு நடந்து வந்தது. அதைத் தடுக்க லூர்து பிரான்சிஸ் தீவிர நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மணல் கடத்தலை தடுத்ததால் : காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 13ஆம் தேதி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக முறப்பநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரில் இன்று லூர்து பிரான்சிஸை கொலை செய்த ராமசுப்ரமணியன் என்பவர் மற்றும் சில நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். ராமசுப்ரமணியன் மீது அன்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ராமசுப்ரமணியன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஏஓ லூர்து பிரான்சிஸ் ராமசுப்ரமணியன் மீது போலிசில் புகார் அளித்ததன் காரணமாகவே பழி வாங்கும் நோக்கில் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். ராமசுப்பிரமணியன் கைது செய்யப்பட்ட நிலையில் மாரிமுத்து என்பவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடினர். சற்று முன்னர் மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் : படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் தனக்குப் பணிமாறுதல் கேட்டபோதும், அவருக்கு பணி மாறுதல் வழங்கவில்லை, உரிய பாதுகாப்பும் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு பெண் கிராம நிர்வாக அலுவலர் பேசியதாக ஒரு ஆடியோ பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், லூர்து பிரான்சிஸ் கொல்லப்பட்டது பற்றி ஆதங்கத்துடன் பேசும் பெண் விஏஓ ஒருவர், "லூர்து பிரான்சிஸை ஆதிச்சநல்லூரில் வெட்டியபோதே விஏஓ சங்கத்தினர் மாவட்ட கலெக்டரை சென்று பார்த்து முறையிட்டோம். கலெக்டரிடமே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தூத்துக்குடி வட்டாரத்திற்கு டிரான்ஸ்பர் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்போது காலி இடம் இல்லை என மாவட்ட ஆட்சியர் கூறிவிட்டார்.

வெட்கமா இல்லையா? : அதன்பிறகு 3 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டது. அப்போது விஏஓ சங்கத்தினர் லூர்து பிரான்சிஸை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே வெட்டு வாங்கி, உயிருக்கு பாதுகாப்பு கேட்டவரை வேறு இடத்திற்கு மாற்றாமல் விட்டுவிட்டீர்கள். அன்றைக்கே போய் லூர்து பிரான்சிஸை மாற்றவேண்டும் என்று குரல் கொடுத்திருத்தால் இன்று இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
அப்போது அவருக்காக குரல் கொடுப்பதை விட்டுவிட்டு இன்று அவர் சாவுக்கு முன்னால் போய் நிற்க வெட்கமாக இல்லையா?" என வேதனையுடன் பேசுவதாக அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. விஏஓ கொலையைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த ஆடியோ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications