தூத்துக்குடி பயங்கரம்.. மது வாங்க பணம் தராத நண்பன்.. உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்த இளைஞர்
தூத்துக்குடி: மது வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது நண்பனை உறவினர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 200 ரூபாய் பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'உன் நண்பனை காட்டு; நீ யார் என சொல்கிறேன்' என ஒரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை. எத்தகைய நண்பர்களுடன் நாம் பழகுகிறோமோ, அவர்களின் குணாதிசயங்கள் நமக்கு வந்துவிடும். அதனால்தான், "சேருமிடம் அறிந்து சேர்"; "கூடா நட்பு கேடாய் முடியும்" போன்ற பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், தீய குணமுடைய நண்பர்கள் சில நேரங்களில் நமக்கே
ஆபத்தாக மாறி விடுவர். அப்படியொரு சம்பவம்தான் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
மரணமடைந்த மகன்.. 30 ஆண்டுகள் கழித்து பழிக்கு பழி வாங்கிய தந்தை.. கேரளாவில் அரங்கேறிய இரட்டைக் கொலை
நண்பர்கள் அதிகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை (28). இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மேலும், புதிய தமிழகம் கட்சியின் கிளைச் செயலாளராகவும் அழகுதுரை இருந்து வந்தார். இவருக்கு அந்தப் பகுதியில் நண்பர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. இவர் வீட்டுக்கு நண்பர்கள்
வருவதும், இவர் தனது நண்பர்களின் வீட்டுக்கு செல்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது.
"மது வாங்க பணம் தா.."
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செட்டிக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழகுதுரை சென்று மது வாங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு அழகுதுரையின் நண்பர் கனகராஜ் (30) என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அழகுதுரையை பார்த்ததும் கனகராஜ் அவரை அழைத்து பேசினார். அப்போது தனக்கு மது வாங்க 200 ரூபாய் பணம் தருமாறு அழகுதுரையிடம் கனகராஜ் கேட்டார். இதற்கு
தன்னிடம் பணம் இல்லை என அழகுராஜ் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
வெட்டிக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், அன்றைய தினம் இரவே தனது நண்பர்களுடன் சேர்ந்து அழகுதுரை வீட்டுக்குச் சென்றார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கனகராஜும், அவரது உறவினர்களும் சேர்ந்து அழகுதுரையை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே அழகுதுரை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து அழகுதுரையின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது நடவடிக்கை
மேலும், அழகுதுரையை கொலை செய்த கனகராஜ், அவரது நண்பர் ஸ்டாலின், உறவினர்கள் மாடசாமி, பட்டுராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடையே இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். மது வாங்க பணம் தராததற்காக நண்பனையே இளைஞர் கொலை செய்த
சம்பவம் தூத்துக்குடியில் பேசுபொருளாக மாறியுள்ளது.