பட்டு வேட்டி, சட்டையுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜய் சாமி தரிசனம்.. பின்னணி என்ன?
தூத்துக்குடி: தவெக தலைவர் விஜய் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பட்டு வேட்டி, சட்டையுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த விஜய்க்கு, கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றிவேல் வழங்க கெளரவிக்கப்பட்டது. இதையடுத்து கடற்கரையிலும் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. அதற்கு முன்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்று ஓய்வெடுத்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாய்க்கு குடும்பத்தினருடன் விடுமுறைக்கு சென்றுள்ளார்.

மறுபக்கம் அதிமுக நிர்வாகிகள் பலரும் கோயில் வழிபாடுகள் மற்றும் ஓய்வை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று அதிகாலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழிபாடு நடத்தி இருக்கிறார். இதற்காக நேற்றிரவே சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார்.
இன்று அதிகாலை சாலை மார்க்கமாக புறப்பட்ட விஜய், திருச்செந்தூர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வருகையால் திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 4 மணியளவிலேயே பெரிய கூட்டம் கூடியது. விஜய்யை காண்பதற்கு அவரது ரசிகர்களும், பொதுமக்களும் முண்டியடித்ததால், அப்பகுதியில் மிகப்பெரிய நெரிசல் ஏற்பட்டது.
பட்டு வேட்டி, பட்டு சட்டையில் வந்திருந்த விஜய், சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதோடு, வெற்றிவேல் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார். இதன்பின் கடற்கரையிலும் விஜய் வழிபாடு செய்தார். விஜய்யின் திடீர் வருகையால் திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விஜய் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரின் மேனேஜர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications