Ajitha Agnel: விஜய் காரை மறித்த தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி!
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெண்கள் அணி நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சி பொறுப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
டிசம்பர் 23ஆம் தேதி அன்று, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றது. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பை எதிர்பார்த்த அஜிதா, பதவி வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தார்.

காலை 10 மணி முதல் தலைமை அலுவலகம் முன்பு ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். தவெக தலைவர் விஜய் வருகை தந்த போது அவரது காரை மறித்து பேச முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஜய், காரை நிறுத்தாமல் போய்விட்டார்.
இதையடுத்து பனையூர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அவரை சமாதானம் செய்ய இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அழைத்தும் அஜிதா செல்லவில்லை.
இந்த தர்ணா போராட்டம் குறித்து அறிந்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பின்வாசல் வழியாக வெளியே சென்றுவிட்டார். போராட்டத்திற்குப் பிறகு அஜிதா, "இறுதி மூச்சு வரை தவெகவுடன் பயணிப்பேன்" என கூறியிருந்தார். இந்த நிலையில் அஜிதா 15-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தவெக கட்சியில் உள்கட்சி மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
விஜய்யின் கார் மீது விழுந்து, தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ள அஜிதா, தூத்துக்குடியை சேர்ந்தவர். இவர் எம்எஸ்சி, பிஎட் படித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து நிறைய ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அது போல் நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார். திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
அண்மையில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அஜிதா வழங்கியிருந்தார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது. தூத்துக்குடியில் அண்மையில் மழை வெள்ளத்தின் போது கூட அதை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திருந்தார். தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் வேண்டாம் என கண்டித்து அஜிதா தலைமையில் தூத்துக்குடியில் போராட்டமும் நடந்தது.












Click it and Unblock the Notifications