கனமழையால் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்...வேலூர் அருகே வீடு இடிந்து விழுந்து 9 பேர் பலி - 4 பேர் படுகாயம்
பேர்ணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை வெள்ளம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்துள்ளது.
வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி வீட்டில் தங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பேர்ணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குல்ஷார் வீதி , அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் மாடிகளில் தங்கினர்.

இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய மனைவி அனிஷா பேகம் (வயது 63)மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் வயது 45 அவரது மகள் மகபூப் தன்ஷிலா( 27) ஆகியோர் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர். மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர். குழந்தைகள் உள்பட மொத்தம் 13 பேர் அந்த வீட்டில் நேற்று இரவு படுத்து தூங்கினர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அந்த வீடு இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் வெளியேற்றி பேர்ணாம்பட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமுக்கு அழைத்து சென்றனர் ஆனால் இரண்டு குடும்பத்தினர் மட்டும் முகாமுக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்தனர் வெள்ளம் அதிகமானதால் வீட்டின் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு தரைட்டமானது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
வீட்டில் இருந்த அனிஷாபேகம் (63),ரோகிநாஸ் (27),கௌசர் (45),தன்சிலா (27),அபிரா (3),மனுல்லா(8),தாமேத் (2),அப்ரா (4),மிஸ்பா பாத்திமா (22) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அந்த வீட்டில் மொத்தம் 13 பேர் இருந்தனர் இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இவர்கள் வீட்டில் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியானது பேர்ணாம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications