13 வயசு.. சமோசா விற்று தம்பிகளை படிக்க வைக்கும் நபில்.. குடியாத்தம் போலீஸை கலங்க வைத்த கதை
வேலூர் : குடியாத்தம் போலீஸ் ஸ்டேசனுக்கு 13 வயதாகும் சிறுவன் சிறிய சைக்கிள் ஒன்றில் சென்றான் . அங்கு தனது அப்பா குடித்துவிட்டு அம்மாவை கொடுமைப்படுத்துவதாகவும், அவரை பிடித்து தயவு செய்து ஜெயிலில் போடுங்கள் என்று கோரிக்கை வைத்தான். இதை கனிவுடன் விசாரித்த போலீசார் எடுத்த ஆக்சன் வேலூரில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே முல்லை நகரில் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரானா.இவர்களுக்கு கல்யாணம் ஆகி 18 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகள் உள்ளனர்..

மூத்த குழந்தை கபிலுக்கு 15 வயது ஆகிறது. இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இரண்டாவது குழந்தையான நபிலுக்கு 13 வயது ஆகிறது. சமோசா விற்றபடி தனது குடும்பத்தையும் சிறுவயதிலேயே கவனித்து வருகிறார்.
இதில் பிரச்சனையே இவர்களின் தந்தையும் கட்டிட தொழிலாளி ஜாபர் தான்.தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம். குறிப்பாக ஜாபர் குடித்துவிட்டு அவரது மனைவி பரானாவிடம் தினந்தோறும் குழந்தைகள் முன்பாகவே தகராறு செய்து வந்திருக்கிறார்.
இதனால் பரானா மனம் வெறுத்து போய் நேற்று மருந்து குடித்து சாகாப்போனார். அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை தேறி வருகிறார்.
இது ஒருபுறம் எனில் ஜாபர் குடித்துவிட்டு மகன்களையும் அடித்து உதைத்துள்ளார். நாளுக்கு நாள் அப்பாவின் சேட்டை அதிகமானதுடன், தனது அம்மாவை துன்புறுத்தியதை கண்டு மனம் நொந்து போனார் இளைய மகன் நபில். இதனால் அவரை பற்றி போலீசில் புகார் அளிக்க தனது சிறிய சைக்கிளில் குடியாத்தம் போலீஸ் ஸ்டேசனுக்கு நபில் வந்தார்.
போலீஸ் ஸ்டேசனுக்கு சிறுவன் வந்ததை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, என்னப்பா, என்னாச்சு என்று கேட்டுள்ளார். அப்போது தனது தந்தை தினமும் குடித்துவிட்டு ரகளை செய்வது குறித்து சிறுவன் நபில் புகாரை தெரிவித்தார். குடும்ப செலவிற்கு பணம் தராமல் துன்புறுத்துவதாகவும் கூறினான். மேலும் தனது அண்ணன் கபில் 15 வயதில் சென்னையில் கூலி வேலை செய்து வருவதாகவும், தான் சமோசா விற்பனை செய்து தன்னுடைய 3 தம்பிகளை பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சிறுவன் நபில், தனது தந்தை தினம்தோறும் குடித்துவிட்டு அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அடிப்பதாகவும், என்னுடைய அம்மா மருந்து குடித்து சாக கிடந்து பிழைத்து இருப்பதையும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதை கேட்ட இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி நேரடியாக கட்டிட தொழிலாளி ஜாபரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தார். அத்துடன் கடுமையான எச்ரிக்கையும் அறிவுரையும் கூறி போலிசார் அனுப்பி வைத்தனர்.
சமோசா விற்று சிறுவயதில் தன் தம்பிகளை படிக்க வைக்கும் 13 வயது சிறுவன் ஒருபுறம் எனில். அவரது தந்தை குடித்துவிட்டு துன்புறுத்துகிறார். மதுவால் ஒரு குடும்பம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இந்த சிறுவனின் குடும்பம் உதாரணம்.












Click it and Unblock the Notifications