அப்பாவி மாறி இருக்காரே.. இவர்தான் நவீத்.. அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட.. கைவச்ச இடமெல்லாம் பெருசு!
வேலூர்: ஏலகிரி மலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீடு மற்றும் வாணியம்பாடியில் தொழிலதிபர்களின் வீடுகளில் புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த 20 சவரன் நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர், ஆசிரியர் நகர், ஏலகிரிமலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

85 சவரன் கொள்ளை
மேலும் ஏற்கனவே திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 13 ந் தேதி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த அதாவுர் ரஹமான் என்பவரின் வீட்டின் இரும்பு கம்பிகளை வளைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோ மற்றும் அறைகளில் இருந்த 85 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த சம்பவத்தில் சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த நவீத் என்பது விசாரணையில் தெரியவந்தது.

துரைமுருகன் வீடு
இவரைப் பிடிக்க போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது பெரிய பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நவீத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர் இதனை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியில் அதாவுர் ரஹமான் என்பவரின் வீடு, ஆசிரியர் நகர் பகுதியில் ஆசிரியரின் வீடு மற்றும் ஏலகிரிமலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி மேலும் வழிப்பறி உள்ளிட்ட தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

4 வழக்கு பதிவு
இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் கவரிங் நகைகள் பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் நவீத் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையம் மற்றும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

மக்கள் அச்சம்
வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளியில் செல்லும் வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications