சென்னை ரயிலில் முன்பதிவு பெட்டியில் நிற்க முடியாத கூட்டம்.. ஆம்பூர் ரயில் நிலையத்தில் தரமான சம்பவம்
வேலூர்: பொதுவாக வார இறுதிகளில் தென் மாவட்ட ரயில்களிலும், பெங்களூர், கோவை வழித்தடங்களில் செல்லும் ரயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும்.குறிப்பாக வார இறுதிகளில் சென்னை செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருப்பது இயல்பு. இந்நிலையில், ஆம்பூரில் முன்பதிவு பெட்டியில் சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறியிருந்தார்கள். இதனால் தாங்க முடியாத பயணிகள் ஆம்பூரில் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டநெரிசல் ரயில்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வார இறுதி முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகள் விழி பிதுங்கிய படி தான் ஊர் திரும்புகிறார்கள். ஒவ்வொரு வாரமும் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பவும், பெங்களுர்,கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதும் பெரும் சிரமமாக இருக்கும்.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயிலில் விடுமுறை முடிந்து காட்பாடி, அரக்கோணம், சென்னைக்கு செல்லும் பயணிகள் கூட்டம் பொதுப்பெட்டியில் நிரம்பி காணப்பட்டது.
பின்னர் அந்த ரயில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நின்றபோது பொதுப்பெட்டியில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட டி-11 பெட்டியிலும் சாதாரண டிக்கெட் பயணிகள் ஏறியிருக்கிறார்கள். அவர்களை அந்த பெட்டியில் இருந்தவர்கள் இறங்குமாறு கூறினார்கள்.இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் ரயில் புறப்பட்டு மெதுவாக நகர தொடங்கியது. இந்த நிலையில் வாக்குவாதம் முற்றியதால் முன்பதிவு செய்து பயணித்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் ரயில் அங்கேயே நின்றது. உடனே ரயில்வே கார்டு, என்ஜின் டிரைவர், அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பொது பெட்டியில் இடம் இல்லாததால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறினோம். இருக்கையில் அமர்ந்து உள்ளவர்களை நாங்கள் எந்த தொந்தரவும் செய்யவில்லை. எனவே விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பொது பெட்டிகளை நிர்வாகம் இணைக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடத்திலும் வாக்குவாதம் செய்தார்கள்.
எனினும் அவர்களை போலீசார் உதவியுடன் வேறு பெட்டியில் ஏற்றினர். அத்துடன் கூடுதல் பெட்டிகள் இணைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ரயில் நிலைய அதிகாரிகள் கூறினர். அதைத்தொடர்ந்து ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications