தாலி கட்டும்போது நோ சொன்ன மணப்பெண்.. டிபனை வீணாக்காமல் சாப்பிட்டுவிட்டுப் பிரிந்த குடும்பத்தினர்
வேலூர்: வேலூரில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், காலை டிபன் வீணாகி விடும் என்பதால் இரு தரப்பினரும் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு மண்டபத்தை காலி செய்தனர்,
வேலூர் மாவட்டத்தில் திருணத்தன்று காலை திடீரென தனக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லை என மணப்பெண் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பெண்ணைச் சமாதானப்படுத்த இரு வீட்டாரும் முயன்ற போதிலும் அவர் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்ததால் வேறுவழியன்றி திருமணம் நிறுத்தப்பட்டது.

திருமணம்
வேலூர் மாவட்டம் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சண்முகப்பிரியா. இவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 31 வயதான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு பாட்டுக் கச்சேரி, விருந்துடன் வரவேற்பு நடந்தது.

பெண் அளித்த ஷாக்
நேற்று காலை 9:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென மணப்பெண் காலை, 6:00 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரை அழைத்து தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்வேன்
இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இரு தரப்பினரும், கல்யாண பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மணப்பெண் தொடர்ந்து, "இந்த திருமணத்தில் விருப்பமில்லை, மாப்பிள்ளையையும் பிடிக்கவில்லை, என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்" என மிரட்டல் விடுத்து, தாலியை தூக்கி வீசியுள்ளார்.

டிபன்
இதையடுத்து, இரு வீட்டாரும் தனது சொந்தக்காரர்களிடம் மன்னிப்பு தெரிவித்து திருமணம் நின்றுவிட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காலை டிபன் வீணாகி விடும் என்ற காரணத்திற்காக இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டதால் உறவினர்கள் காலை டிபனை மட்டும் சாப்பிட்டுவிட்டு சோகத்துடன் மண்டபத்தை காலி செய்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications